மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முழக்கமிட்டார் மறைந்த திமுக நிறுவனரும் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணா. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மதுரையில் அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மதுரை மண் பலவிதமான மாற்றங்களுக்கு வித்திடும் மண். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று, அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்று கூறியுள்ளது தற்போது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றே கூறலாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக இணைந்த போது, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா மீண்டும் பேசி அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். கடந்த 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அப்போதய ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தோல்வியடைந்தது. எதிர்கட்சியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அரியணை ஏறியது.
2006 சட்டசபை தேர்தலில் திமுக வென்ற தொகுதிகள் 96 மட்டுமே. ஆட்சி அமைக்க 22 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் வெளியிருந்து ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி கூறியதால் 2011ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகாலம் முதல்வராக ஆட்சியை நிறைவு செய்தார் அப்போதய மறைந்த முதல்வர் மு.கருணாநிதி.
தேர்தலில் வென்றால் கூட்டணி கட்சியினருக்கு ஆட்சியில் பங்கு என்று கூறி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்தவர் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய். திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் கூட அவ்வப்போது கூட்டணி ஆட்சி பற்றி குரல் எழுப்பினால் திமுக அதற்கு பெரிதாக ரியாக்சன் செய்ததில்லை.
இந்த சூழ்நிலையில்தான் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நாளில் இருந்தே தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்று கூறி வருகிறார் அமித்ஷா. அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிமுக அமையும் என்று பதில் அளித்து வருகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவது நல்லதுதான் என்று கூறியுள்ளார்.. கரூரில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, ஆட்சியில் அதிகாரப்பகிர்வு மிகவும் நல்லது ஆள்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியமாகும? 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும்? தொங்கு சட்டசபை அமைந்து கூட்டணி ஆட்சி என்ற நெருக்கடிக்கு தள்ளப்படுமா? பாஜகவின் கனவு நனவாகுமா? பார்க்கலாம்.