டெல்லி, சாகேத் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை இன்று எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டார். கடந்த மாதம் 10ம் தேதியே அதிமுகவில் டெல்லி அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. அங்கு எடுக்கப்பட்டு வெளியான புகைப்படத்தில் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்த அதிமுகவினர், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா புகைப்படங்கள் எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, ”டெல்லியில் நீங்கள் திறந்திருப்பது அதிமுகவின் கட்சி அலுவலகமா? அல்ல எடப்பாடி பழனிசாமி ரசிகர் மன்றமா? கட்சி அலுவலகத்தில் அதன் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகைப்படம் இல்லை, அம்மா அவர்களின் படமும் இல்லை. வெறும் எடப்பாடி பழனிசாமி படம் மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் தான் விவசாயிகாலால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்திக்கடவு -அவிநாசி திட்டம் பாராட்டு விழாவில் புரட்சித்தலைவர்- அம்மா படம் புறக்கணிப்பது பெரும் சர்ச்சை ஆனது. ஆனால் தற்போது கட்சி அலுவலகத்திலேயே இல்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆணவத்தின் உச்சத்தை காட்டுகிறது.
அம்மா அவர்களின் மறைவுக்கு பின் பலர் திமுகவில் ஐக்கியமாகி நல்ல பொறுப்பிற்கு சென்றார்கள். இன்னும் பலர் தங்களை பாதுகாத்துக்கொள்ள பாஜகவில் இணைந்தும், பாஜகவுடன் இணக்கமாகவும் செயல்பட்டார்கள். ஆனால் என்னைப்போன்ற உண்மையான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா விசுவாசிகள் என்றென்றும் அதிமுகவை பலப்படுத்த வேண்டும், மீண்டும் ஆளும் கட்சியாக உருவெடுக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு பயணித்து வருகிறோம்.
ஆனால் சமீபகால எடப்பாடி பழனிசாமி அவர்களின் நடவடிக்கைகள் மூலம் இந்த இயக்கத்தில் எல்லோரும் அரவணைக்கப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டு அதிமுக வலிமைப்படுத்தப்படும் என்கிற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் தகர்ந்து வருகிறது. பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதும், மாற்று கட்சியை நோக்கி பயணிப்பதுமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இது இந்த இயக்கத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
இதேநிலை தொடருமானால் இந்த இயக்கம் மேலும் பலவீனப்படும். பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்து முடிவெடுத்தால் இந்த இயக்கத்தை பாதுகாக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.