கோரமண்டல் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது மேற்கு வங்காளத்திற்கு புறப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒடிசாவின் பாலசோரின் அருகே வந்த போது ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. 3 ரயில்கள் மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்ததில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக விபத்து நடைப்பெற்ற இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உட்பட பலர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் ஒரு லைனில் இப்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. விபத்து நடைபெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு சரக்கு ரயில் சேவையானது தொடங்கியது. தற்போது இந்த விபத்துக்குள்ளான இடத்தில் பிற பாதைகளில் தொடர்ந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. 56 விரைவு ரயில்கள் வேறு பாதை வழியே செல்லும் வகையில் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட ஒடிசா வழியாக செல்லும் 125-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கு பிறகு இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலானது மேற்கு வங்காளத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது 18 ரிசர்வ் பெட்டிகளும் மூன்று பொது பெட்டிகள் உடன் புறப்படுகிறது. இதில் 1224 நபர்கள் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். முன்பதிவு செய்யாத பயணிகள் என மொத்தமாக பார்த்தால் 1500 பயணிகள் பயணிக்கின்றனர்.