இந்திய பாதுகாப்புத் துறையில் மேலும் ஒரு மைல்கல்லாக, ஆர்மீனியா நாட்டுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இணைத் தயாரிப்பு (Shared Production) ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது.


இந்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஆர்மீனியா தலைநகர் யெரெவானுக்கு சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஆர்மீனியாவின் உயர் தொழில்நுட்பத் தொழில் துறை அமைச்சர் டேவிட் தடேவோசியனை (Davit Tadevosyan) சந்தித்து ஆலோசித்த நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
முக்கிய சந்திப்புகள் மற்றும் உயர்மட்ட ஆலோசனைகள்:
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், ஆர்மீனிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சுரேஷ் பாபிக்யான் (Suren Papikyan) மற்றும் ஆர்மீனிய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எட்வர்ட் அஸ்ரியான் (Edvard Asryan) ஆகியோரையும் நேரில் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த உயர்நிலைச் சந்திப்புகளில் ஆர்மீனியாவுக்கான இந்திய தூதர் நிலாக்ஷி சஹா சின்ஹாவும் கலந்து கொண்டார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
ஆராய்ச்சி & மேம்பாடு: பாதுகாப்புத் துறை சார்ந்த அதிநவீன தொழில் நுட்பங்களை இரு நாடுகளும் இணைந்து ஆராய்ச்சி செய்து உருவாக்கவுள்ளன.
கூட்டுத் தயாரிப்பு: ராணுவக் கருவிகள் மற்றும் தளவாட உற்பத்தியில் கூட்டுத் தயாரிப்பு முறையை மேம்படுத்துவது.
தொழில்துறை ஒத்துழைப்பு: இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இடையே நேரடி வணிக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உருவாக்குதல்.
கடந்த சில மாதங்களாகவே இந்தியா மற்றும் ஆர்மீனியா இடையே ராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு உறவுகள் அதிகரித்து வரும் நிலையில், கையெழுத்தாகியுள்ள இந்த புதிய ஒப்பந்தம் ஆசிய மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதிக்கும் வர்த்தக வளர்ச்சிக்கும் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
