Homeசெய்திகள்தலையங்கம்மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர்

மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர்

-

- Advertisement -

மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

அடிப்படை தேவை

உணவு, கல்வி, மருத்துவத்தைப் போன்று அடிப்படையான தேவைகளுள் ஒன்று மின்சாரம். அப்படிப்பட்ட மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குகிறது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த நட்டம் மக்கள் தாங்கள் உபயோகித்த மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தாமல் வந்ததல்ல.

 

வாரியத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளால் வந்தது. ஆனால் அவர்கள் முழுபூசனிகாயை சோற்றில் மறைப்பது போல் அதற்கான உரிய காரணங்களை கூறுவதற்கு மறுக்கிறார்கள். நட்டத்தை மக்கள் தலையில் திணித்து விட்டு அதிகாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

வாரியத்தின் பொறுப்பு

ஒரு வாரியத்திடம் கொடுக்கப்பட்ட துறை நட்டத்தில் இயங்கினால் அதற்கான பொறுப்பு வாரியத்தினுடையது. 20 வருடங்களுக்கு முன்னால் மின்சார வாரியம் இலாபத்தில் இயங்கியது. பத்து வருடங்களுக்கு முன்னர் 44,000 கோடி ரூபாய் நட்டம் என்று கணக்கு காட்டினார்கள். தற்போது 1,50,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு நட்டம் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க மறுக்கிறார்கள். மின்வாரியத்தில் உயர் பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ( Shop Floor ) ஊழியர்கள் வரை ஊழலில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள்.

நூதன ஊழல்

இவர்கள் நாள்தோறும் புதிய புதிய வழிமுறைகளை கண்டுப்பிடித்து நூதன முறையில் மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள். வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் மின் கணக்கீட்டாளர்கள் மாதக் கணக்கில் வீடுகளுக்கு போகாமல் அலுவலகத்தில் இருந்துக் கொண்டே தோராயமாக மின் அளவை கம்பியூட்டரில் ஏற்றி விடுகிறார்கள். பயணாளிகள் கூடுதலாக பில் தொகை இருப்பதை கண்டு அதிர்ச்சியுடன் EB அலுவலகம் சென்று சண்டை போடும் நிலையை உருவாக்குகிறார்கள்.

அவ்வாறு சண்டை போடும் பயணாளிகளுக்கு மட்டும் சரி செய்து விடுகிறார்கள். யூனிட் குறைவாக இருந்தால் மக்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஆனால் ஒரு வருடம் கழித்து லட்சக் கணக்கில் பில் வந்து விடுகிறது, அப்போது என்ன செய்வது என்று தெறியாமல் தவிக்கிறார்கள்.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக வீடுகளுக்கு மின் கணக்கெடுப்பு நடத்தவில்லை. அதனால் ஒரே நேரத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் 30,000 ரூபாய், 40, ஆயிரம் ரூபாய் என்று பில் வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்புகிறார்கள்.

மின் கணக்கீட்டாளர் அவருடை கம்பியூட்டரில் 7230 யூனிட் என்று ஒரு பயணாளருக்கு ரீடிங்கை ( Reading ) ஏற்றியுள்ளார். ஆனால் அந்த பயணாளி வீட்டில் உள்ள மீட்டரில் 723 யூனிட் மட்டுமே காட்டுகிறது. அதன் பின்னர் அந்த பயணாளி மின்வாரியம் அலுவலகம் சென்று கேட்டதும் மீட்டரில் பழுது என்ற சொத்தை காரணம் கூறி சரி செய்து அனுப்புகிறார்கள்.

மக்களை சிக்கலில் சிக்க வைக்கும் மின்வாரியம்

அதேபோன்று (DC) Disconnect என்றும் (RC) Reconnect என்றும் ஒரு மோசடி வழியை வைத்துக் கொண்டு மக்களிடம் நூதன முறையில் மோசடி செய்து வருவதாக ஆவடியை சேர்ந்த அன்பு என்பவர் கூறுகிறார். மின்வாரிய அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் ஒரு மீட்டரை (DC) Disconnect செய்து விடுகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த மீட்டர் உரிமையாளருக்கு தெரியாது. அவர் வீட்டில் மின்சாரமும் தடையின்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அடுத்த ஆறு மாதம் கழித்து மின் ஊழியர் வந்து உங்கள் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது, எப்படி லைட் எரிகிறது? எந்த வழிமுறையில் மின்சாரத்தை பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறீர்கள், அதனால் உங்கள் மீது புகார் கொடுக்கப் போகிறேன் என்று மிரட்டுகிறார்.

மோசடியில் அதிகாரிகளின் பங்கு

அந்த பயணாளி பயந்ததும் அவரிடம் பல ஆயிரங்களை பெற்று செல்கிறார். இந்த மோசடி கும்பல் அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் இருக்கிறது. இதுபோன்ற மோசடியில் AE, AD, DE என்ற அனைத்து அதிகாரிகளுக்கும் பங்கு போகிறது. மின்கட்டண உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், இந்த மோசடி கும்பலினால் மேலும் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கலைஞர் கால ஆட்சியில் ஆற்காடு வீராசாமி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது அந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. கலைஞரின் பல சாதனைகளை கடந்து மின் வெட்டு பற்றி மட்டுமே மக்கள் பேசினார்கள். அந்த தேர்தலில் திமுக தோல்விக்கு மின்வெட்டும் காரணமாக அமைந்தது.

தற்போது மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் எல்லோரும் கொள்ளையர்களாக இருப்பதால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  – என்.கே.மூர்த்தி

MUST READ