நடிகை ஸ்ரீ திவ்யா ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து காக்கி சட்டை, மருது, ஈட்டி போன்ற பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். சூர்யாவின் 2D நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா இந்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஸ்ரீதிவ்யா இதுவரை நடித்துள்ள படங்களுக்கு டப்பிங் கொடுத்ததில்லை. மெய்யழகன் திரைப்படத்தில்தான் தனது சொந்தக் குரலில் டப்பிங் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மெய்யழகன் திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -