நடிகர் ரவி தொடங்கியுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவில் ‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரவி. இவர் தற்போது கராத்தே பாபு, பராசக்தி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர யோகி பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இந்த புதிய படமானது ரவி மோகன் தயாரிப்பில் உருவாக இருக்கிறது.

நடிகர் ரவி சமீபத்தில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை
தொடங்கி இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக நடிகர் ரவி நேற்று (ஆகஸ்ட் 25) தனது தோழி கெனிஷாவுடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். மேலும் ரவி மோகன் தொடங்கியுள்ள புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நடிகர் ரவி நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
அதே சமயம் சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா, கார்த்தி, ஜெனிலியா உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். அடுத்தது இந்த விழாவில் ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. திறப்பு விழா தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.