ஜேசன் சஞ்சய் படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவரது முதல் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதே சமயம் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இருப்பினும் சமீபகாலமாக இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வந்தது. அதன்படி ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படப்பிடிப்பை முடிக்க இன்னும் ரூ.8 கோடி தேவைப்படுகிறது என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாக, மற்றொரு பக்கம் இசையமைப்பாளர் தமன் பாடல் ஒன்றை முடித்து தர தாமதிப்பதால் இதன் படப்பிடிப்பும் முடிவடைய தாமதமாகிறது என மறுபக்கம் பல தகவல்கள் வெளியாகின்றன.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், ஒரே ஒரு பாடலை படமாக்கினால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.