பலத்தை நிரூபிக்காத விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பேச்சை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளாது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் 2வது நாளாக நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இதன் தாக்கம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நடிகரும், தவெக தலைவருமான விஜய், இரண்டாவது வாரமாக நாகையில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடைய முதல் சந்திப்பில் பரபரப்பு எதுவும் இல்லை. முதல் சந்திப்பில் அவர் கிளைம் செய்ததை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. சில விஷயங்களை சீமான் கேட்டார். அதற்கு விஜய் பதில் சொல்லவில்லை. எனவே முதல் சந்திப்பில் உள்ள அரசியல் முக்கியத்துவம் இரண்டாவது சந்திப்பில் இல்லை. புதிதாக வந்தவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தங்களை தான் சொல்கிறார் என்கிறார்கள்.
விஜய் என்பவர் ஒரு மேம்போக்காக பேசக்கூடிய எதிர்க்கட்சி தலைவர். விஜய் திமுகவுக்கு எதிராக பேசுகிறார் என்றால்? திமுக அரசு நாகை மாவட்டத்திற்கு என்ன வளர்ச்சி பணிகளை செய்துள்ளது என்று சொல்வதற்கு திமுகவுக்கு ஒரு லாபம் இருக்கிறது. மற்றொன்று விஜயால் திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக விஜய் எதிரி என்று காட்டக்கூடிய தன்மை இருக்கிறது. தலைவா? படம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டபோது, கலைஞர், ஜெயலலிதாவுக்கும், அவருடைய ஆதரவாளருக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்று சொன்னார். எனவே ஸ்டாலின் தனக்கு எது லாபம் என்று கணக்கு போட்டுதான் பண்ணுகிறார்.
விஜயை விமர்சித்து பேசுவது திமுகவுக்கு லாபம். புதிய கட்சியாக விஜய் வருகிறார். அவருக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை. 2011ஆம் ஆண்டிலேயே அவர் தங்களை விட்டு போய்விட்டார். திமுக தொண்டர்கள் மத்தியில் விஜய் நமக்கு எதிரானவர் என்கிற எண்ணத்தை தெளிவு படுத்த வேண்டிய கடமை ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதைதான் விஜய் சரியாக செய்வதாக பார்க்கிறேன். திமுக அரசு தனது பிரச்சாரத்திற்கு இடம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், கேட்கும் இடத்தை வழங்குவதில்லை என்றும் விஜய் குற்றம்சாட்டுகிறார்.
அவர் தினசரி மக்களை சந்தித்தால் இந்த பிரச்சினை இருக்காது. ஒரு நாள் மக்களை சந்திப்பதை 7 நாட்களாக பிரித்து பார்த்தார் என்றால் மக்கள் கூட்டம் கூடாது. அவர்களும் பிரிந்து பார்த்து விடுவார்கள். சனிக்கிழமைகளில் மக்கள் ஓய்வில் இருப்பார்கள் என்பதால் தான் அன்றைய தினம் மக்களை சந்திப்பதாக விஜய் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இருப்பவர்களை ஓய்வுக்கு அனுப்புவதற்காகவும் தான் மக்களை சந்திப்பதாக சொல்கிறார். இவை எல்லாம் வெறும் வார்த்தைகள். இது வேலைக்கு ஆகாது.
திருச்சியை போன்றே, நாகையிலும் கூட்டம் காரணமாக பிரச்சாரம் தாமதமானதாக சொல்கிறார்கள். விஜய்க்கு கூடுகிற கூட்டம் எல்லாம் வாக்குகள் கிடையாது. கமல்ஹாசனுக்கு எலலா இடங்களிலும் கூட்டம் கூடியது . ஆனால் வாக்குகள் விழுந்தது தென் சென்னையிலும், ஸ்ரீபெரும்புதூரிலும் தான். விஜய்க்கு வரும் கூட்டத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் என்ன சொல்லி வருகிறார். யாருக்காக வருகிறார்? என்பது தான் முக்கியம். இந்தியா பாகிஸ்தான் போரில், ராணுவத்திற்கு ஆதரவாக நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் ஊர்வலமே சென்றுவிட்டார். ஓபிஎஸ், இபிஎஸ் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். கருத்தில்லா கந்தசாமியான விஜய் இதில் என்ன கருத்து சொல்கிறார்? தனக்கும், திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்று விஜய் சொல்வதில் உண்மை இல்லை.
விஜய் – காங்கிரஸ் இடையே கூட்டணி என்று செய்திகள் உலா வருகின்றன. பலம் நிருபிக்காத விஜயுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது. 2024 மக்களவை தேர்தலில் விஜய் பலத்தை நிரூபித்து இருந்தால் கூட்டணி அமைத்து இருக்கலாம். பலம் நிரூபித்த விஜயகாந்த் சென்றபோதே சோனியாகாந்தி திமுக கூட்டணியை விட விரும்பவில்லை. அப்போது பலம் நிரூபிக்காத விஜயை நம்பியா காங்கிரஸ் கூட்டணி செல்லப் போகிறார்கள்.
மயிலாடுதுறையில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சுதா எம்.பி. ஆகலாம் என ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கலாம். அதனால் பாதிக்கப்பட்ட பிரவீன் சக்ரவர்த்தி ஸ்டாலினுக்கு எதிராக கருத்தை வைக்கிறார் . பிரவீன் சக்ரவர்த்தியை வைத்தா காங்கிரஸ் ஓடுகிறது? திமுக கூட்டணி காரணமாகவே காங்கிரசுக்கு இடங்கள் கிடைக்கின்றன. திமுக கூட்டணி இன்றி தனித்து நின்று வசந்தகுமாரை தவிர யார் டெபாசிட் வாங்கினார்கள். கே.எஸ். அழகிரி தலைவர் பதவியை விட்டு போகிறபோது கூட ராஜ்யசபா சீட்டு வாங்க முடியாமல் போனவர். அவர் விரக்தியில் ஒரு கருத்தை சொல்கிறார். அதை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை.
விஜயினுடைய 2வது மக்கள் சந்திப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், இது ஸ்டாலினுக்கு லாபமாகும். ஸ்டாலினை ஒன் டூ ஒன்னில் தான் தோற்கடிக்க முடியும். பலம் நிரூபிக்காத விஜய், இம்முறை பலத்தை நிரூபிக்கும் விதமாகவே தன்னுடைய களத்தை அமைக்க வேண்டும். தற்போது விஜய், ஸ்டாலின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்து, ஸ்டாலினுக்கு உதவிபுரிகிறார். இதுதான் விஜயினுடைய ரோல். இதேபோல்தான் விஜயகாந்த், கமலஹாசன் போன்றவர்களும் எம்ஜிஆர் வாக்குகளை பிரித்து திமுகவுக்கு உதவினார்கள். விஜய் அபிமானிகள், ஆதரவாளர்கள் வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகள் தான். அது எடப்பாடி பழனிசாமியை தான் கூடுதலாக பாதிக்கும்.
தமிழ்நாடு அரசியல் களம் என்பது 4 முனை போட்டியாக தான் உள்ளது. அதில் விஜயின் வரவு என்பது சீமானுக்கு மிகப்பெரிய லாபமாகும். தமிழக அரசியல் என்பது ஸ்டாலின் வெர்சஸ் அதர்ஸ் என்கிற நிலையில்தான் உள்ளது. அதர்சில் ஒருவராக விஜய் உள்ளார். அவர் தன்னை ஸ்டாலினுக்கு போட்டியாளராக தகவமைக்கிறார். அவருக்கு கூடுகிற கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. அந்த கூட்டத்தில் விஜய் நமக்கு தேவை. இவர் நமக்கானவர் என்று நினைப்பவர்கள் மட்டும் வாக்களிப்பார்கள். இதுதான் விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு நடைபெற்றது. விஜய்க்கும் நடக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.