உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு சராசரியாக 2.1% குறைந்துள்ளதாக சீன அறிவியல் அகாடமி நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகளவில் உள்ள ஆறுகளில் கரைந்த ஆக்ஸிஜன் (Dissolved Oxygen – DO) அளவு தொடர்ந்து குறைந்து வருவதாக சீன அறிவியல் அகாடமி நடத்திய புதிய ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆய்வின் படி, 1985ஆம் ஆண்டு முதல் உலகின் பல ஆறுகளில் ஆக்ஸிஜன் அளவு சராசரியாக 2.1 சதவீதம் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக புவி வெப்பமயமாதலால் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதே குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் உயிர் வாழ்தல் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற நிலை தொடர்ந்தால், 2100ஆம் ஆண்டுக்குள் வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் மேலும் 4% முதல் 5% வரை ஆக்ஸிஜன் குறையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மீன்கள் சுவாசிக்க முடியாத “டெட் சோன்”எனப்படும் உயிரற்ற பகுதிகள் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றத்துடன் சேர்ந்து நகர்ப்புற கழிவுகள், ரசாயன உரங்கள் கலப்பு, தொழிற்சாலை மாசு மற்றும் அணைகள் அமைத்தல் போன்ற மனித செயல்பாடுகளும் ஆக்ஸிஜன் குறைவுக்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆக்ஸிஜன் குறைபாடு நீர்வாழ் உயிரினங்களை மட்டுமல்லாமல், மீன்வளத்தை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனைத் தடுக்க நீர் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் புவி வெப்பமயமாதலை குறைக்கும் நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…
