“சாதியை பார்த்து அரசு பயப்படுகிறதா?” – சேலத்தில் மனித உரிமை ஆர்வலர் அனல் பறக்கும் பேட்டி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆர்வலர் ‘எவிடன்ஸ்’ கதிர், சாதியை பார்த்து முதலமைச்சர் விஜய் பயப்படுகிறாரா என அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற ஆணவப் படுகொலை தொடர்பான விசாரணையை ஒட்டி செய்தியாளர்களைச் சந்தித்து அவர் அளித்த பேட்டியின் விவரங்கள் வருமாறு:

நீதியரசர் கே.என்.பாஷா கமிட்டி விசாரணை
ஆணவப் படுகொலைகளுக்கான தனிச்சட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி சேலத்திற்கு வருகை தந்தது. இக்குழுவினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களை நேரில் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, மதுரை ‘எவிடன்ஸ்’ அமைப்பு சார்பில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கதிர், பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய 6,000 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை ஏற்கனவே கமிட்டியிடம் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்புகளும் அரசின் மௌனமும்
செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய எவிடன்ஸ் கதிர், “நாடு முழுவதும் ஆணவப் படுகொலைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 79 தீர்ப்புகளும், உயர் நீதிமன்றங்களில் 54 தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் கோகுல்ராஜ், கௌசல்யா வழக்குகள் உள்பட 7 தீர்ப்புகள் வந்துள்ள போதிலும், அவை அனைத்தும் தற்போதைய எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்படும் என அரசு உறுதியளித்திருந்தது. அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி மௌனம் காப்பது மிகவும் ஆபத்தானது.”
முதலமைச்சருக்கு நேரடி கேள்வி
மேலும் ஆவேசமாகப் பேசிய அவர், “பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் அரசு, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர மட்டும் ஏன் தயங்குகிறது? சாதியைப் பார்த்து முதலமைச்சர் விஜய் பயப்படுகிறாரா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்களின் மௌனமும் காவல்துறையின் போக்கும்
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 12 ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளதாகத் தெரிவித்த கதிர், பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்தையும் அமைச்சர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூடக் கூறவில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ஆணவக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியே வந்து காவல்துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக எந்தவித உயர்மட்ட ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினரே இதில் அதிகம் பாதிக்கப்படுவதால், உடனடியாகக் கடுமையான தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர் அழுத்தமாக வலியுறுத்தினார்.
