ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’ என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ‘ஹக்கன்க்ரூஸ்’ (Hakenkreuz) என்று திருத்தம் செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி (NCERT) இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
“ஹிட்லர் தனது நாஜி ஜெர்மனி கொடியில் ‘ஹக்கன்க்ரூஸ்’ எனப்படும் கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினார். இது இந்துக்களின் புனித சின்னமான ‘ஸ்வஸ்திகாவைத்’ தோற்றத்தில் ஒத்திருந்தாலும், இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ‘ஹக்கன்க்ரூஸ்’ சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்து மதச் சடங்குகள் மற்றும் திருமணங்களின் போது மங்களிகரமாக உச்சரிக்கப்படும் ‘ஸ்வஸ்திக்’ மந்திரமும், அதன் புனிதச் சின்னமும் ஆன்மீக ரீதியில் உயர்வானது. இந்நிலையில், ஒன்றிய அரசின் என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில், ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடத்தில் ஹிட்லரின் நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ எனப் பல ஆண்டுகளாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்து மதப் புனிதச் சின்னம் தவறாகச்சித்திரிக்கப்படுகிறது” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே பாடப்புத்தகத்தில் உள்ள அந்தத் தவறான குறிப்பை நீக்கிவிட்டு உரிய உண்மையான பெயரான ‘ஹக்கன்க்ரூஸ்’ என மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநர் ஆகியோர் தரப்பில் முறையான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
