அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகச் செயல்படுத்திய, உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது. இந்த அதிரடித் தீர்ப்பு, அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கப்போவதாகக் கூறி, ‘சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டம்’ (International Emergency Economic Powers Act – IEEPA) மூலம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். இந்தத் தன்னிச்சையான நடவடிக்கை, உலக நாடுகளிடையே மட்டுமின்றி, அமெரிக்க வணிக நிறுவனங்களிடமும் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்தது.
நீதிமன்றம் கூறியது என்ன?
இதனை எதிர்த்து அமெரிக்க மாகாணங்களும், பல்வேறு வணிக நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அந்நிய நாட்டுப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு வழங்கப்படவில்லை. IEEPA சட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை” என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தனர். மேலும், இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

ரூ. 9.5 லட்சம் கோடி திருப்பி வழங்க நடவடிக்கை
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட வரித் தொகையை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களுக்குத் திருப்பி வழங்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை வசூலிக்கப்பட்ட 15.77 லட்சம் கோடி ரூபாயில், சுமார் 60 சதவீதமான 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 9.5 லட்சம் கோடி ரூபாய்) ஏற்கனவே திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள தொகையைத் திருப்பிச் செலுத்தும் பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பொருளாதாரத் திட்டங்களுக்குச் சறுக்கல்
அதிபர் டிரம்ப் தனது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாகக் கருதிய இந்த வரி விதிப்பு, உச்சநீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட்டிருப்பது, அவரது நிர்வாகத்திற்குப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச வணிக ரீதியிலான அவரது தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் இட்டிருக்கும் இந்த ‘கொட்டு’, உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
