Homeசெய்திகள்தமிழ்நாடுகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த தமிழின் போர்க்குடி: கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலில் மூத்த பத்திரிகையாளர்...

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த தமிழின் போர்க்குடி: கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவேந்தலில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உரை!

-

- Advertisement -
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முத்தமிழறிஞருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 8-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தி இந்து குழுமத்தின் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலைஞருடன் தனக்கு இருந்த பத்தாண்டுகால நட்பையும், அவரது தனித்துவமான அரசியல் ஆளுமையையும் அவர் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார்.
மூத்த பத்திரிகையாளர்
ஊடகவியலாளர்களின் உற்ற நண்பர் கலைஞர்!
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய என்.ராம், “கலைஞர் மறைந்து எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன; ஆனாலும், அவரை இன்னமும் நம் மனங்களிலிருந்து முழுமையாக விலக்க முடியவில்லை” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்:
“தி இந்து பத்திரிகையில் நான் ஒரு சாதாரண நிருபராகத் தொடங்கிய காலம் முதல், எடிட்டர் பொறுப்புக்கு உயர்ந்தது வரையிலான எனது ஊடகப் பயணத்தில் கலைஞருடன் எனக்கு இருந்த உறவு மிக நெருக்கமானது. பத்திரிகையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடிய தலைவராக அவர் விளங்கினார். கோபாலபுரத்திலும் அண்ணா அறிவாலயத்திலும் அவரை எளிய முறையில் சந்திக்க முடியும். எங்களைப்போன்றவர்கள் கடுமையான விமர்சனங்களை எழுதியபோதிலும், அவர் ஒருபோதும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததில்லை; தொலைபேசியில் அழைத்து விவாதிப்பாரே தவிர, எந்த அடக்குமுறையையும் கையாண்டதில்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலில் இணையற்ற சிகரம்!
கலைஞரின் மகத்தான அரசியல் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர்:
“50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக, 13 முறை போட்டியிட்டு அத்தனை முறையும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 5 முறை முதலமைச்சர் என இந்திய அரசியலில் கலைஞர் எட்டிப்பிடித்த உயரத்தை எவராலும் எட்ட முடியாது. அவரது மறைவின்போது நாட்டின் பிரதமர் தொடங்கி 11 மாநில முதல்வர்கள் அஞ்சலி செலுத்த வந்ததே அவரது அகில இந்திய செல்வாக்கிற்குச் சான்றாகும். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூட, தமிழ் இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் அரசியல் வாழ்வுக்கும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றவை எனப் புகழ்ந்துரைத்ததை நாம் இங்கு நினைவுகூர வேண்டும்” என்றார்.
உழைப்பு… உழைப்பு… உழைப்பு!
கலைஞரின் தனித்திறமை குறித்துப் பேசுகையில்:
“அவர் பெரிய கல்விப்புலத்தில் படித்துவிட்டு வந்தவர் அல்ல; ஆனால் இயற்கையாகவே அவருக்கு இருந்த ‘குவிக் விட்’ (Quick wit) எனும் அறிவுத்திறன் அபாரமானது. தஞ்சை மாவட்டத்தின் நிலப்பிரபுத்துவ சூழலில், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மிகச் சிறு வயதிலேயே கிளர்ந்தெழுந்தவர். தனது கல்லறைக் கல்வெட்டில் அவரே குறிப்பிட்டுச் சென்றதுபோல, ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான்’ என்பதற்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் சலியாமல் உழைத்தவர்தான் கலைஞர்” என்று புகழாரம் சூடினார்.
கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமும்!
தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், கருத்துச் சுதந்திரம் குறித்தும் தன் கவலையைப் பகிர்ந்துகொண்ட என்.ராம்:
“ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துகளையும் கடுமையான விமர்சனங்களையும் சகித்துக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். ஆனால், இன்று பத்திரிகையாளர்கள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் பாயும் வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான அறிகுறி அல்ல. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது எளிய மற்றும் உழைப்பைக் கொட்டும் போக்கின் மூலம் தந்தையின் பாதையில் கட்சியைத் திறம்பட நடத்திச் செல்கிறார். என்றாலும், ஆரம்பக் கட்டங்களில் காணப்படக்கூடிய இதுபோன்ற சகிப்பின்மைச் போக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி திமுக!
முடிவாக, வரவிருக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) போன்ற தேசிய அளவிலான சவால்களை திமுக எதிர்கொள்ளும் விதம் குறித்தும் பேசிய அவர்:
“திமுக தன் அதிகாரத்தை இழந்திருக்கலாமே தவிர, தனது பலத்தை ஒருபோதும் இழந்ததில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் இன்றைய தலைவர் ஸ்டாலின் எனத் தொடரும் இந்த இயக்கம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும். கலைஞரின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் என்றென்றும் நம்மை வழிநடத்தும்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைப்படி வழங்குவது சலுகையே தவிர உரிமை அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

 

MUST READ