தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், இன்று சட்டப்பேரவையில் பேசிய பேச்சுக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தமக்கு வேலையோ, சொந்தக் காரோ இல்லை என்றும், காதல் தோல்வி அடைந்ததாகவும் அவர் சபையில் குறிப்பிட்டது இணையத்தில் வைரலானது. தேனியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து, அங்கிருந்து ஆட்டோவில்தான் தலைமைச் செயலகத்திற்கு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


சொத்து மதிப்புப் பிரமாணப் பத்திரமும், அம்பலமான உண்மையும்
சபையில் அவர் வெளியிட்ட இந்தத் தகவல்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அவருக்குச் சொந்தமாக ஏற்கனவே கார் உள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தனது தொகுதிக்குள் ‘எம்எல்ஏ’ போர்டு பொருத்தப்பட்ட காருடன் அவர் வலம்வரும் புகைப்படங்களும் விமரிசனங்களைச் சந்தித்து வருகின்றன.
மேலும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தமக்குச் சொந்தமாக 2023-ம் ஆண்டு வாங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 72 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பீடும் காலாவதியான முரண்
பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வாகனத்தின் காப்பீடு (Insurance) ஐந்து மாதங்களுக்கு முன்பே காலாவதியாகி முடங்கியுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்குவது சட்டப்படி குற்றம் என்பதால், இதுகுறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சட்டமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாக எம்எல்ஏ பேசியது தொகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெட்டிசன்களும் இதற்குத் தங்களது கண்டனங்களைத் பதிவிட்டு வருகின்றனர்.
