திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு வர நினைக்கிறார் திருமாவளவன் என்ற பேச்சு இருந்து வருகிறது. திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் திருமாவளவன் இந்த முடிவை எடுப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது .

அதே நேரம் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புது கூட்டணி அமைத்து வடமாவட்டங்களில் இரண்டு கட்சிகளுக்கும் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி கணிசமான வாக்குகளை பெற்று ஓரளவு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்டு இதை தொடர்பாக இரு கட்சியினரும் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் பரவுகிறது .
இந்த நிலையில் திருமாவளவன், பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக பேட்டியளித்திருக்கிறார் வானதி சீனிவாசன்.

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ’’திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பதன் மூலம் அவர் நினைப்பது போன்று சமூக நீதியோ, பட்டியலின மக்களுக்கு எந்த ஒரு நன்மையோ நடக்காது என்பதை திமுகவின் இரண்டு வருட ஆட்சியில் பார்த்து விட்டார் . எந்த ஒரு பட்டியலின மக்களின் பிரச்சனைக்கும் திமுக அரசாங்கத்தால் தீர்வு காண முடியவில்லை . பின்னர் எதற்காக திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார் . அவர் திமுக கூட்டணியை விட்டு விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ எனக்கூறி இருக்கிறார் .
திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று வானதி சீனிவாசன் இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இல்லாமல் அவர் இப்படி அழைக்கவில்லை. உள்நோக்கம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.