‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற கம்பீரமான குரலாலும், நகைச்சுவை தளிர்ந்த எளிமையான தமிழ் பேச்சாலும் தமிழக மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.


மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைவு
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று பிரிந்தது. தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் தாரக மந்திரமாகத் திகழ்ந்த இவரது மறைவு, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டிமன்றக் கலையின் பொற்காலம்
சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் அடித்தட்டு மக்களுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் கொண்டு சேர்த்த பெருமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவையே சாரும். தமிழ் பட்டிமன்றக் கலையை உலகளவில் கொண்டு சென்று, ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் அங்கம் வகிக்கும் அளவுக்கு அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர். அவரது தனித்துவமான நடுவர் பாணியும், நாகரிகமான நகைச்சுவையும், தமிழ் உச்சரிப்பும் தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு பொற்காலமாகப் போற்றப்படுகிறது.

திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
சாலமன் பாப்பையாவின் மறை செய்தி அறிந்ததும் தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறித்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (ட்விட்டர்) பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. பட்டிமன்றத்தை வீடு வீடாகக் கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாகப் பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது சொற்கள் வழி வழியாகத் தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளாா்.
தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு
தமிழையும் பட்டிமன்றத்தையும் பிரித்து அறிய முடியாத அளவுக்குத் தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் தொண்டிற்காகவே அர்ப்பணித்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத மாபெரும் இழப்பாகும். அவரது மறைவையடுத்து, பல்வேறு தரப்பினரும் மதுரைக்கு விரைந்து சென்று அவரது உருவப்படத்திற்கும், உடலுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
