பாமக தேர்தல் பணிக்குழு செயலாளரும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமைப்பாளருமான மு.ஜெயராமன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தைச் (SFI) சேர்ந்த மிருதுளா என்பவர், சௌமியா அன்புமணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து அவதூறான மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்பியதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பரப்பும் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரிக்கை
புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘Left Lane Tamil’ என்ற யூடியூப் சேனலில் இயங்கி வரும் மிருதுளா என்பவர், சௌமியா அன்புமணி குறித்து அவதூறான தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் சௌமியா அன்புமணி, பசுமைத்தாயகம் உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், சட்டமன்றத்தில் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்துக் குரல் கொடுத்து வரும் இவரின் பணிகளுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இளவரசன் மரண விவகாரம் மற்றும் அரசியல் உள்நோக்கம்
இந்நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் சௌமியா மணியையும் பாமகவையும் இழிவுபடுத்தும் வகையில் மிருதுளா பேசியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இளவரசன் மரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பாமக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துகள் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஜெயராமன் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல் துறையிடம் முறையீடு
எனவே, சௌமியா அன்புமணி மற்றும் பாமக குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பிய மிருதுளா மற்றும் ‘Left Lane Tamil’ யூடியூப் சேனலின் நிர்வாகிகள் மீது சட்டப்பூர்வமான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அந்தச் சம்மந்தப்பட்ட அவதூறு வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்
