நடிகர்கள் ரகுமான் மற்றும் பாவனா இணைந்து புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரகுமான். 1980, 90 களில் கதாநாயகனாக திகழ்ந்த ரகுமான் தற்போது படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றி வருகிறார்.

அவர் தற்போது சமாரா, எதிரே போன்ற மலையாள படங்களிலும் நிறங்கள் மூன்று, அஞ்சாமை போன்ற தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இது தவிர பாலிவுட்டில் ‘கண்பத்’ மற்றும் ‘குயின்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மதுராந்தக சோழன் என்ற கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரகுமான் அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை பாவனா கதாநாயகியாக நடிக்கிறார். சில காலம் மலையாளப் படங்களில் தென்படாமல் இருந்து வந்த பாவனா தற்போது மீண்டும் படங்களில் காணத் துவங்கியுள்ளார். அந்த வகையில் இந்தப் படத்தில் அவர் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தை ஏபிகே சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது மற்றும் சுதீப் சாரங் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும் இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கொடைக்கானல், பாண்டிச்சேரி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.