முன்னாள் தமிழ் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28 அன்று சென்னையில் காலமானார். அவருடைய மறைவு தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும் பலர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட பாடில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினி,கமல், விஜய் உட்பட பல தமிழ் நடிகர்களும் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் இறந்த அன்று, இறுதிச் சடங்குக்கு நேரில் வர முடியாமல் வெளிநாட்டில் மாட்டிக் கொண்ட பிரபலங்களும் சென்னை திரும்பியவுடன் முதலில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கிய பின்னர்தான் அடுத்த வேலைகளைத் தொடங்குகின்றனர்.
திரைத்துறையினருக்கு விஜயகாந்த் எவ்வளவு நன்மைகள் செய்திருப்பார் என்பதற்கு நடிகர்கள் அவர் மீது காட்டும் அன்பும் பக்தியுமே சாட்சி. அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற ஜனவரி 19 அன்று, சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வைத்து இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தி, அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -


