இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளி மாநாட்டில் (International Textile Summit 360) காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி குறித்து பெருமிதத்துடன் உரையாற்றினார்.
மத்திய அரசின் ‘நிர்யாத்’ (NIRYAT) போர்டல் மற்றும் நிதி ஆயோக் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

சாதனையின் பின்னணி: முதலமைச்சரின் உரையின் முக்கிய அம்சங்கள்
முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, பத்தாண்டு கால கனவு, “திராவிட மாடல்” அரசின் முறையான திட்டமிடலால், ஜவுளித் தொழிலில் பாரம்பரியமாக முதலிடத்தில் இருந்த மாநிலங்களை தமிழ்நாடு முந்தியுள்ளது.
பின்னலாடை ஏற்றுமதி: இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை (Readymade Garments) ஏற்றுமதியில் மட்டும் தமிழ்நாடு 33% பங்களிப்பை வழங்கி, தனிப்பெரும் சக்தியாக விளங்குகிறது.
வேலைவாய்ப்பு: இத்துறை மூலம் சுமார் 31 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஜவுளிக் கொள்கை: 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. இதன் கீழ் நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை நவீனப்படுத்த 20% மூலதன மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
”தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கில் ஜவுளித்துறை மிக முக்கியத் தூணாக இருக்கும்.” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
தொழில் துறையினரின் வரவேற்பு
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஜவுளி மையங்களின் தொழில் கூட்டமைப்புகள் இந்த வளர்ச்சியை வரவேற்றுள்ளன. குறிப்பாக, இறக்குமதி வரி குறைப்பு மற்றும் மாநில அரசின் மானியத் திட்டங்கள் சர்வதேச சந்தையில் தமிழகப் பொருட்களின் போட்டியை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
