பொன்னேரி,
P.G.பாலகிருஷ்ணன்
பனை மரத்தை வைத்து அரசியல் கூத்து அரங்கேறி வருகிறது. சீமானின் நாடகத்தால், பனை தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது. என்று பொன்னேரி பால கிருஷ்ணன் விமா்சித்துள்ளாா்.தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்க கூடிய பனைமரம், உலக அளவில் தமிழ்நாட்டின் அடையாளம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த பனை மரங்கள் தமிழர்களுடைய வாழ்வியலில் ஒன்றிப்போய் இருந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு நிரந்தர பொருளாதார வருவாய் கொடுக்க கூடிய அட்சய பாத்திரமாகவும் பனைமரம் இருந்திருக்கிறது. பனைமரத்தில் இருந்து அதிக வருவாய் பெற்று பயனடைந்த மக்களிடம் இருந்து ஆட்சியாளர்கள் வரி வசூல் செய்த காலமெல்லாம் இருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட பனை மரத்தை கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு அளித்தொழிக்க வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் சாராயம் காய்ச்சும் ஆலைகள் நடத்தியும், சாராய வியாபாரம் செய்து கொண்டும் இருந்த பெரும் முதலாளிகள் சிலர் திட்டமிட்டனர். சாராயக்கடைகளை கிராமங்களிலும் திறந்து அதிக அளவில் கொள்ளை இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கிராமங்களில் விற்பனை செய்யக்கூடிய கள்ளில் போதை மருந்துகள் கலக்கப்படுகின்றன எனவும், அதனால் கிராம மக்களுடைய உடல் நலத்திற்கு கேடு எனவும், அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களிடம் விளக்கம் அளித்து அவரை மூளை சலவை செய்து, தமிழகத்திற்கு பல நன்மைகளை செய்த அவரை கொண்டே கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு, 1987 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்வதற்கும், விற்பனை செய்யும் கள்ளை வாங்கி குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், பனை மரங்களை சொந்தமாக வைத்திருப்பவர்கள் தாங்களாகவே கள் இறக்கி குடிப்பதற்கு தடை இல்லை, என தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பனை மரங்களை வைத்து தமிழ்நாட்டில் இப்போது ஒரு பெரிய அரசியல் கூத்து அரங்கேறி வருகிறது. அதில், குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில், கள் இறக்கும் போராட்டம் நடத்தி இருக்கிறார். கள் கடைகளை மூடிய எம்ஜிஆர், கள் விற்பனை செய்ய கூடாது, என்று தான் கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்.
ஆனால், சொந்த பனை மரங்களில் ஏறி, கள் இறக்கி குடிப்பதற்கு தடையில்லை என்ற உத்தரவை பயன்படுத்தி, போலீசார் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதை உணர்ந்து, இந்த போராட்ட நாடகத்தை சீமான் அரங்கேற்றி இருக்கிறார். இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு எதிராக செயல்படுவதாக நாடகம் தான் நடத்துகிறாரே தவிர, இதனால் பனைமரத் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடையாது.பனை மர தொழிலாளர்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள், தமிழ்நாட்டில் பால்வளத்துறை, மீன்வளத்துறை என்று இருப்பதை போல், பனைவளத்துறை என்ற தனித்துறையை தமிழக அரசு நிறுவ வேண்டும். அதன் மூலம், தமிழக அரசு தற்போது பனை விதைப்பு பணியை வேளாண்மை துறையில் உள் அடங்கிய தோட்டக்கலை துறையின் வாயிலாக செய்வதையும், பனைத் தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகளையும், நல திட்டங்களையும் தொழிலாளர் துறையின் மூலமாக செய்வதையும், பனை சார்ந்த தொழில்களை வரைமுறைப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் செய்ய வேண்டிய பணிகளை, கதர் மற்றும் காதி துறையின் மூலமும் செயல்படுத்தும் பணிகளையும் மாற்றி அமைக்க வேண்டும்.
இப்படி தலையை சுற்றி மூக்கை தொடும் வழிமுறைகளை விட்டு விட்டு, பனைவளத்துறை என்ற ஒரு தனித்துறையை நிறுவி, அதில் இந்த மூன்று துறையின் கீழ் இயங்கக்கூடிய பனை சார்ந்த பணிகளை ஒன்று இணைத்து தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடினால், அது பனை தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை விட்டுவிட்டு மரம் ஏறும் போராட்டங்களைப் போல் இப்படி வித்தைக் காட்டும் போராட்டங்களை செய்து கொண்டிருக்க கூடிய சீமான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் நல்ல முறையில் சிந்தித்து பனைத் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் போராட வேண்டும். தமிழக அரசும் உண்மையிலேயே பனை தொழிலாளர்களுக்கு பயனடையும் வகையில் மேற்குறிப்பிட்ட பணிகளை ஒன்றிணைத்து பனைவளத்துறையை துவக்க வேண்டும்.அந்த பனைவளத்துறையின் வாயிலாக, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரக்கூடிய பனை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தலாம். அந்த திட்டப் பணிகள் என்னவென்றால், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதன் முதலாக 2022- ம் ஆண்டிலிருந்து, பனைவிதை வங்கி என்ற ஒரு அமைப்பை துவக்கி அதன் மூலம், பனை மரங்கள் அதிகம் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் பனை விதைகளை சேகரித்து, பனை மரங்கள் இல்லாத ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு அதை நீர்நிலைகள் மற்றும் அரசு பொது இடங்களில் நடவு செய்யப்படுகிறது.
மேலும், பனை விதை சேகரிப்பவர்களுக்கு ஒரு விதைக்கு இரண்டு ரூபாயும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் வழங்கப்படுகிறது. இதே போல், தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் இருக்கக் கூடிய அனைத்து ஊராட்சிகளிலும் பனை விதைகளை நடவு செய்தால், 15 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் இருக்க கூடிய 12,500 ஊராட்சிகளிலும் குறைந்தது 5,000 பனை மரங்களுக்கு மேல் இருக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது கிராமப்புறங்களில் நன்கு வளர்ந்து இருக்கக்கூடிய அந்த பனை மரங்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 20 பனை மரங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என அனுமதி வழங்கினால் அதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
அதை விளக்கமாக தமிழக அரசும், போராட்டக்காரர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கூற வேண்டும் என்றால், ஒரு பனை மரத்திலிருந்து ஆண்டிற்கு 175 லிட்டருக்கு மேல் பதநீர் கிடைக்கும். 250 ML குளிர்பானம் 50 ரூபாய் என்றும், ஒரு குவாளை பழச்சாறு 50 ரூபாய் என்றும் விற்பனை செய்யக்கூடிய இந்த காலகட்டத்தில், உடலுக்கும், குடலுக்கும் ஆரோக்கியம் வழங்க கூடிய பதநீர் ஒரு லிட்டர் 50 ரூபாய் என்று வைத்து கொண்டால் கூட, ஒரு பனை மரத்திலிருந்து கிடைக்க கூடிய பதநீரை மட்டும் விற்பனை செய்தாலே ஆண்டிற்கு 7,500 வரை வருவாய் கிடைக்கும்.அதேபோல், பதநீராக விற்பனை செய்யாமல், அதை அப்படியே காய்ச்சி கருப்பட்டியாக மாற்றினால், 6 லிட்டர் பதநீருக்கு ஒரு கிலோ கருப்பட்டி வீதம் கிட்டத்தட்ட 30 கிலோ கருப்பட்டி கிடைக்கும். அதை குறைந்தது ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், ஆண்டிற்கு 9 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் கருப்பட்டியை பல மதிப்பு கூட்டபட்ட பொருட்களாக உற்பத்தியும் செய்யலாம்.
மேலும், பனை ஓலைகளில் கைவினை பொருட்கள் செய்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, விற்பனை செய்யலாம். இப்படி பல விதங்களில் ஒரு பனையில் இருந்து ஒரு ஆண்டிற்கு 10,000 முதல் 12,000 ரூபாய் வரை வருவாய் பெறலாம். தமிழக அரசும், போராட்டம் நடத்துபவர்களும், நன்றாக சிந்தித்து தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால், அடுத்து வரக்கூடிய 15 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு ஆண்டும் (ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாதத்தில் மட்டும்) 2 லட்சம் ரூபாய் வருவாய் பெறுவார்கள் என்பதை புரிந்து கொண்டால் நல்லது என்று விமர்சித்துள்ளாா்.