2 ஆண்டுகள் வகித்த தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதால் வேதனைப்படும் அன்புமணி, 20 ஆண்டுகளாக தலைவராக இருந்த ஜி.கே.மணியை திடீரென பொறுப்பில் இருந்து நீக்கியது ஏன் என்று காடுவெட்டி குருவின் மருமகன் காடுவெட்டி மனோஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் குறித்தும், அன்புமணியின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்தும் காடுவெட்டி மனோஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின்போது அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக அன்புமணி அழுதது என்பது ராமதாஸ் தவறு செய்கிறார் என்று தொண்டர்களிடம் தவறான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்துள்ளார். தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி நான் என்ன தவறு செய்தேன்? ஒரு மாதமாக எனக்கு தூக்கமில்லை என்று பேசுகிறார். அவர் இதுவரை கட்சிக்காக என்ன செய்திருக்கிறார்.
கட்சியை உருவாக்கியது வளர்த்தது எல்லாம் மருத்துவர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர்தான். இன்றைக்கு பாமக 30 லட்சம் வாக்காளர்களை கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் இவர்கள் இருவர்தான். காடுவெட்டியார் இருக்கிறார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பார்த்துக்கொள்வார் என்ற தைரியத்தால்தான் எல்லாற்றையும் ராமதாஸ் செய்தார். இன்றைக்கு அன்புமணி இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. ஏன் என்றால் அன்புமணிக்கு, தலைமைப் பண்பு என்பதே கிடையாது. காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் எல்லாம் 7 வருடங்களாக இதைதான் சொல்லிக் கொண்டிருந்தோம். அதை தற்போது மருத்துவர் ராமதாசே சொல்லிவிட்டார்.
தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் காடுவெட்டி குருவுக்கு தான் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. அதனால்தான் மருத்துவர் ராமதாசின் செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி காடுவெட்டி குருவை அவமதித்து விட்டார் என்று சொன்னார். காடுவெட்டி குருவை தூக்கிபிடிக்காவிட்டால் நம்மால் கட்சி நடத்த முடியாது என்று ராமதாஸ் உணர்ந்து கொண்டுள்ளார். மேடைகளில் காடுவெட்டி குரு பேசியபோது அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். அன்புமணியின் பேச்சை கேட்கக்கூட ஆள் இருக்காது. இதனால் அவர் மீது அன்புமணி வருத்தத்தில் இருந்தார். காடுவெட்டி குருவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதை சாதகமாக பயன்படுத்தி அவரை மருத்துவக்கொலை செய்துவிட்டனர் என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். தற்போது குருவை அமதிப்பு செய்ததை ஒப்புக்கொண்ட ராமதாஸ், இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த உண்மையையும் ஒப்புக்கொள்வார். வன்னியர் சமுதாயத்திற்கு அன்புமணி செய்தது என்ன? 25 தியாகிகள் குடும்பத்திற்கு அவர் என்ன செய்திருக்கிறார்.
இன்றைக்கு மேடை போட்டு அன்புமணி அழுவதற்கு காரணம் பதவி போய்விட்டது என்பதுதான். என் அதிகாரத்தை பறித்துவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன் என்கிறார். இதே கேள்வியை அன்புமணியிடம் கேட்கிறேன். ஜி.கே.மணி கட்சி தலைவராக பல ஆண்டுகளாக உழைத்துள்ளார். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி அவரை ஏன் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினீர்கள். 2 வருடங்கள் கட்சி தலைவராக இருந்ததற்கு பொறுப்பில் இருந்து நீக்கியதை பொறுக்கமுடியவில்லை என்கிறீர்கள். 20 வருடங்கள் பாமகவுக்கு உழைத்து, எத்தனை சிறைகளுக்கு சென்றிருப்பார். எவ்வளவு வழக்குகளை சந்தித்து இருப்பார். பாமகவில் ஊழல் வழக்கு என்பது அன்புமணி மீது மட்டும்தான் இருக்கிறது. அவர் மீது போராட்ட வழக்குகளே கிடையாது. போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லிவிட்டு இவர் வழக்கில்லாமல் சென்றுவிடுவார்.
அன்புமணி ராமதாஸ், பெற்ற தாயையே பாட்டிலை கொண்டு தாக்கியுள்ளார். அன்றைக்கு மருத்துவர் ராமதாசையும் சேர்த்துதான் அன்புமணி தாக்கினார். ராமதாசின் சொத்துக்களை மகள்வழி பேரன் முகுந்தனுக்கு கொடுப்பதால் ஏற்பட்ட பிரச்சினையாகும். மருத்துவர் ராமதாஸ் அன்றைக்கு வாடகை சைக்கிளில் வந்தவர். ஆனால் பாமகவில் இன்றைக்கு ஆடி, பென்ஸ் போன்ற சொகுசு கார்கள் வைத்திருப்பவர்கள் அன்புமணி, சௌமியா ஆகியோர்தான். இவர்கள் எந்த கிராமத்துக்கு சென்று கட்சியை வளர்த்தார். பாமக மாநாட்டில் தலைவர், வன்னியர் சங்க தலைவர் மற்றும் இளைஞரணி தலைவர் பேசுவார்கள். ஆனால் இந்த மாநாட்டில் ஏன் முகுந்தனை பேச அனுமதிக்கவில்லை. வன்னியர் சங்க தலைவர் தன்னை அழைக்காமல் கூட்டம் நடைபெற்றதாக போராட்டம் நடத்துகிறார். 2016ல் தனியாக போட்டியிட்டு 6.5 சதவீத வாக்குகள் வைத்திருந்த நிலையில், இன்றைக்கு 1.5 சதவீத வாக்குகள் வைத்துள்ளனர். வடதமிழகத்தில் 10 சதவீத வாக்குகள் தான் உள்ளது. தற்போது ராமதாசும், அன்புமணியும் சண்டைபோடுவது எந்த வகையில் கட்சிக்கு நன்மை பயக்கும்.
அன்புமணி பொது வெளியில் பேசுவதை இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினால் சரியாகிவிடும். தருமபுரியில் சென்று என்ன தவறு செய்தேன் என்று கேட்கிறார். ராமதாஸ் பிரஸ்மீட் வைத்து, அன்புமணியை குற்றம்சாட்டுகிறார். இந்த பிரச்சினையை வீட்டிற்குள்ளே பேசி முடித்திருக்கலாம். ஆனால் அன்புமணி வீட்டிற்குசென்றாலே அவரை அடிக்கிறார். 108 மாவட்ட செயலாளர்களில் 8 பேர் வந்ததாக ராமதாஸ் சொல்கிறார். மற்றவர்களை அன்புமணி போன் செய்து மிரட்டுகிறார். அன்புமணி, சவுமியா மேலும் 2 நபர்கள் எல்லோருக்கும் போன் செய்து மிரட்டுகின்றனர். சரஸ்வதி அம்மாளை தாக்கியபோது சௌமியாவும் உடன் இருந்தார். இனிமேல் கட்சி என்பது ராமதாஸ் அய்யாவிடம் தான் இருக்கும். நிர்வாகிகள் போகாவிட்டாலும் தொண்டர்கள் முழுக்க முழுக்க ராமதாசிடம் உள்ளனர். தொண்டர்கள் யாரும் அன்புமணி பக்கம் கிடையாது. நிர்வாகிகள் ராமதாசை சந்தித்தால் நாளைக்கு பதவி போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.