அரவக்குறிச்சி தொகுதியில் தன்னை செந்தில்பாலாஜி தோல்வி அடைய செய்ததால் அவர் மீது அண்ணாமலை தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை, பாஜக தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்படுவதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கிட்டில் முறைகேடு என்று சொல்லி 2014ல் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தார்கள். 2ஜியில் குறைவாக ஏலம் விட்டதாக சிஏஜி அறிக்கை அடிப்படையில் குற்றம்சாட்டினார்கள். ஆனால் இன்றைக்கு அதே சிஏஜி, 5ஜி அலைக்கற்றையில் 7.5 லட்சம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மீது குற்றம்சாட்டுகிறார். மீரட் சாலையை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.18 கோடியாகும். ஆனால் இவர்கள் போட்டது கிலோ மீட்டருக்கு ரூ.250 கோடியாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் ஊழல். இவற்றை எல்லாம் சொன்னதும் அதே சிஏஜி தான். ஆனால் அதுகுறித்து ஏதாவது பேசினார்களா?
டாஸ்மாக் விவகாரத்தில் தவறே நடைபெற வில்லையா? என்று கேட்டால் யாருமே அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மதுபான பாட்டில் வாங்கும்போது ரூ.10 கூடுதலாக வாங்கி இருப்பார்கள். அது கடையில் உள்ள ஊழியர்களின் தவறாகும். இந்த ரூ.10 பில்லில் வந்திருக்காது. அப்போது இதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், நான் தர்க்க ரீதியாக ஒரு கேள்வியை கேட்கிறேன். வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட ஒருவரும்போது ரசீதில் உள்ள தொகையை விட கூடுதலாக ரூ.50 கொடுத்திருப்பார்கள். நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 20 லட்சம் கேஸ் சிலிண்டர்கள் விற்பனையாகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு ரூ.10 கோடியாகும். ஓராண்டிற்கு ரூ.3,650 கோடியாகும். மத்தியில் 10 வருடமாக மோடி ஆட்சியில் உள்ளார். அப்படி என்றால் ரூ.36,500 கோடி மோடி ஊழல் செய்துவிட்டார் என்பது தானே இதன் அர்த்தம். பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வாங்கியதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்றால், சிலிண்டருக்கு ரூ.50 கூடுதலாக வாங்குவதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?.
டாஸ்மாக்கில் நடைபெறும் தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக தான், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்கள் பதிவு செய்த வழக்கில் தான், தற்போது அமலாக்கத்துறை வருகிறது. எந்த அரசாவது தங்கள் ஆட்சியின் மீது தங்களுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்யுமா? மாநில லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் நீங்கள் எங்கே வருகிறீர்கள்?. உள்ளே வந்து யாரை குற்றவாளியாக காட்ட முயற்சிக்கிறீர்கள்?. இதற்கு காரணம் என்ன என்றால்? இன்னும் ஓராண்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இந்த ஓராண்டில் திமுக அரசு மீது அவர்களுக்கு சொல்வதற்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் எண்ணற்ற நலத் திட்டங்களை செய்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்தார்கள். அமெரிக்க மதுபானத்தின் விலையை குறைத்ததை தவிர வேறு என்ன செய்துவிட்டார் மோடி?
அமைச்சர் செந்தில் பாலாஜி மட்டும் பாஜகவால் குறிவைக்கப்படுவது ஏன்? என்றால் அதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் சார்ந்திருக்க துறையாகும். மதுபானத்தில் ஊழல் என்று குற்றம்சாட்டுகிறபோது, அது எளிதில் மக்களிடம் சென்றடைந்து விடும். மற்றொன்று அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடிப்பதற்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வேலை செய்தார். அதை முதன்முதலாக நான் ஊடகத்திற்கு சொல்கிறேன். முதலில் அரவக்குறிச்சி தொகுதி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரவக்குறிச்சியில் உள்ள பள்ளப்பட்டி போன்ற இடங்களில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ளனர். வழக்கமாக அங்கு இஸ்லாமியர்கள்தான் அதிகளவில் போட்டியிடுவார்கள். ஆனால் அண்ணாமலை ஒரு ஒன்றரை வருடங்களாக அங்கே தீவிரமாக வேலை செய்தார். கோவில் கோவிலாக சென்று தங்கி, படுத்துறங்கி ஒவ்வொருவரையும் சந்தித்து, நீங்கள் என்னை கட்சியாக பார்க்காதீர்கள். யாரோ ஒரு இஸ்லாமியர் இங்கே போட்டியிடுகிறார். நான் இந்த மண்ணின் மகன். எனக்கு வாக்களியுங்கள் என்று சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.
நான் அப்போது மாலைமுரசு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எனக்கு போன் செய்து அரவக்குறிச்சியில் ஜவாஹிருல்லா போட்டியிட்டால் கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. அவர் தனி சின்னத்தில் போட்டியிட்டால் அண்ணாமலை வெற்றி பெற்றுவிட்டு விடுவார். ஏன் என்றால் மத ரீதியாக வாக்குகளை பிரித்துவிடுவார்கள். அதனால் உள்ளுரை சேர்ந்த திமுக வேட்பாளரை நிறுத்தினால் கடும் போட்டி கொடுத்து நாம் வெற்றி பெற்றிடலாம் என்று சொன்னார். அண்ணாமலையும் வெல்லக்கூடாது. ஜவாஹிருல்லா சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று செந்தில்பாலாஜியும், ஜோதிமணியும் முடிவு எடுத்திருந்தார்கள்.
இதனை ஜோதிமணி மூலம் எனக்கு செந்தில்பாலாஜி தெரிவித்தார். நான் உடனடியாக ஜவாஹிருல்லாவிடம் தொடர்புகொண்டு அரவக்குறிச்சியில் உள்ள சூழ்நிலையை எடுத்துரைத்தேன். வேட்புமனு தாக்கலுக்கு 3 நாட்களே இருந்த நிலையில் உடனடியாக அவரை பாபநாசம் தொகுதிக்கு மாற்றி, செந்தில்பாலாஜிக்கு அரவக்குறிச்சியை வாங்கினோம். அந்த தேர்தலில் அரவக்குறிச்சி உள்ளிட்ட கரூர் மாவட்டம் முழுவதும் திமுகவின் வெற்றிக் கோட்டையாக மாற்றினார். அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்ததால் அண்ணாமலைக்கு, செந்தில்பாலாஜி மீது தனிப்பட்ட கோபமாக மாறியது. நம்மை எம்எல்ஏ ஆக முடியாமல் தடுத்துவிட்டார்கள் என்று கோபம் அவருக்கு உள்ளது. இதற்கு நானே தனிப்பட்ட சாட்சியாவேன். ஏனென்றால் இருதரப்பினரிடம் நான்தான் பேசினேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.