மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான பிரச்சினையில் பாஜகவின் தலையீடு இருப்பதாகவும், அவர்கள் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் அயயநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான பிரச்சினை குறித்தும், அதன் பின்னணி குறித்தும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மருத்துவர் ராமதாஸ், அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதன்பிறகு அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதிகாரம் தன்னிடமே உள்ளது என்று காட்டியுள்ளார். என்னை அசைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மருத்துவர் ராமதாஸ் தான் நினைத்தால் அன்புமணியை தூக்கிவிடுவேன் என்று சொன்னார். பொதுக்குழுவை கூட்டி நீக்குவேன் என்று சொன்னார். தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் 23 பேரில் 22 பேர் அவருடன் இருக்கிறார்கள். மருத்துவர் ராமதாஸ் பொருளாளரை நீக்குகிறார். அன்புமணி கடிதம் வழங்கி மீண்டும் அவர்களுக்கு பதவியை கொடுக்கிறார். பின்னர் 3 மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் நீக்கினார். அதையும் அன்புமணி உடனே மீண்டும் நியமிக்கிறார்.
அன்புமணி உடன் நிற்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அனைவரும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் தான். ஏற்கனவே இருந்த மூத்த நிர்வாகிகளை நீக்கிவிட்டுதான், அவர்களுக்கு மாற்றாக இவர்களை நியமித்துள்ளார். நீண்ட தொடர் நடவடிக்கை தான் அன்புமணியின் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையாகும். அவர் திடீரென அதிகாரத்தை கைப்பற்ற முயலவில்லை. ராமதாஸ் சொல்வது போல அன்புமணி அடித்து ஆட தொடங்கி விட்டார். அன்புமணி, தனக்கு கட்டுப்பட்டவராக இருப்பார் என்று ராமதாஸ் நினைத்திருந்தார். ஆனால் அவர் கட்டுப்பட்டவர் இல்லை என்று மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பின்னர் விமானத்தில் வருகிறபோதே சொல்லி விட்டார். 6 வருடங்களுக்கு முன்பே கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ராமதாசிடம் அவர் சொல்லி விட்டார்.
ராமதாஸ் அரசியல் என்பது, மக்கள், மக்களுடைய நலன், அதுசார்ந்த அரசியல், சமூகநீதி மற்றும் வாழ்வுரிமை போராட்டம் ஆகியவை சார்ந்த அரசியலாகும். ஆனால் அன்புமணி அரசியல் என்பது, வளர்ச்சி, வளர்ச்சியை கொடுக்கிறோம்… என்பது மட்டும்தான். அவரது பார்வை அனைத்தும் கபளீகர அரசியலாகும். அன்புமணி, மோடியின் கருவியாவியாவார். பாமக, அதற்குள்ள வாக்கு வங்கி, பாஜகவின் அரசியல் சர்வைவலுக்கு தேவைப்படுகிறது. இன்றைக்கு பாஜக சொல்கிறது நாங்கள் 11.5 சதவீத என்று. ஆனால் பாமக 3.5 சதவீதமாகியது. பாஜக எவ்வளவு வாக்குகளை பாமகவுக்கு கொடுத்தது?. அன்புமணி எதிர்பார்ப்பது, தனக்கான அதிகாரம், தனக்கான பதவி ஆகும். அதில் பரந்துபட்ட மக்கள் நலன் வரவே வராது. என்.எல்.சி போராட்டம் உள்ளிட்ட பாமக நடத்திய எந்த போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளித்திருக்கிறது?. என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அன்புமணி, மத்திய அரசை கேள்வி எழுப்பினாரா?
ராமதாசை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு என்பது கிடையாது. அவர் தன்னுடைய கட்சியின் சர்வைவலை பார்க்கிறார். பாமக என்கிற ஒரு கட்சி பலம்வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும். இன்றைக்கு அது பலம் இல்லாமல் போனதற்கு அன்புமணி எடுத்த தவறான நடவடிக்கைகள் தான் காரணமாகும். இன்றுதான் சுதந்திரமாக உணர்வதாகவும், இவ்வளவு காலம் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி சொல்கிறார். சுதந்திரம் என்பது எது? பாமகவின் நிறுவனரே உங்களுக்கு தடையாக இருந்தாரா? கட்சியை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்கள் எல்லோரையும் நியமித்தீர்கள். அதையும் தாண்டி கூட்டணி எல்லாம் உங்கள் விருப்பப்படி அமைத்தீர்கள். எல்லாம் தோல்வி அடைந்ததா? இல்லையா?
போராட்டத்தால் வளர்ந்த கட்சி பாமக. அந்தபோராட்டம், அந்த உணர்வுகள் என்று எதுவும் தெரியாமல் வளர்ந்தவர் அன்புமணி. இப்படிபட்ட ஒருவர் கட்சியின் தலைமை ஆகிவிட்டார். வன்னிய மக்களுக்கான கட்சியாக இருந்த பாமக, குடும்பத்திற்குள் சுறுக்கி ராமதாஸ் அதிகாரத்தை கொடுத்தார். அதன் பிறகு அன்புமணி அவர் இஷ்டப்படி செயல்பட தொடங்கிவிட்டார். பாஜக கூட்டணி என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் கூட்டணிக்கு போன விதம், முடிவு எடுக்கப்பட்ட விதம். அதனால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு. கூட்டணி முடிவு எடுக்கிறபோது பாஜகவை சார்ந்து அன்புமணி முடிவெடுக்கிறார். அவர்களை சார்ந்து நிற்கிறார். ராமதாஸ் அது வேண்டாம் என்கிறார்.
ஐயா ராமதாசை வைத்துதான் கட்சி. மக்களிடம் போக வேண்டும். மக்கள் வாக்களிக்க வேண்டும் அல்லவா? ராமதாசுக்கு எதிராக முடிவு எடுத்தார் என்றால் அந்த மக்கள் அன்புமணிக்கு முழுமையாக வாக்களிப்பார்கள் என்பது சந்தேகம். அன்புமணி ஐயா வழி நடப்போம் என்று சொல்கிறார். இந்த காலத்தில் இவர் எதற்காக பொடிவைத்து பேசுகிறார் என்று மக்களுக்கு தெரியாதா? பாமகவை காப்பாற்ற அவர்களுக்குள் சமரசம் ஏற்பட வேண்டும். அதுதான் ஜி.கே.மணி நெருக்கடியான நிலை என்று சொன்னார். எதிரும் புதிருமாக முடிவு எடுக்கும்பட்சத்தில் பாமக பலம் இழந்துபோய்விடும். பிறகு ஒரு நிர்ணய சக்தியாக பாமக இருக்காது. ராமதாஸ் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தால் தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு, வன்னியர்களுக்கு நலன். அன்புமணியிடம் கட்சி சென்றால் ஒன்றுமே இருக்காது. நடப்பு நிகழ்வுகளை பார்த்தால் இருவருமே இறங்கி வர மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
பாமகவில் மோதல் தொடரும்பட்சத்தில் வாக்காளர்கள் அதிமுக – திமுக என்று வேறு கட்சிகளுக்கு போய்விடுவார்கள். ராமதாஸ், தற்போது பாமகவை விட்டு வெளியேறியவர்களை எல்லாம் மீண்டும்கட்சிக்குள் கொண்டுவருவார். அப்படி கட்சியை வலிமைப்படுத்துவார். எனக்கு ஆச்சரியம் என்ன என்றால் அவர் கண்ணீர் சிந்தியதுதான். மாபெரும் தலைவராக இருக்கும் ராமதாஸ், எந்த இடத்தில் அன்புமணி தேர்வுசெய்தார். ஆனால் எவ்வளவு பேர் வெளியே இருந்தனர் .ஜி.கே.மணி எல்லாம் கிள்ளு கீரையா? அவர் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? வடிவேல் ராவணன் சாதாரண ஆளா? சைதாப்பேட்டையில் சாதாரண நபராக இருந்த ஏ.கே.மூர்த்தி, மத்திய ரயில்வே அமைச்சராகி உ.பி. வரை சென்று பெயர் எடுத்தார்.
ராமதாஸ், அன்புமணியிடம் தலைமைப் பண்பு இல்லை என்று சொன்னார்.அதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அன்புமணி, தனக்கு அந்த பண்பு உள்ளது போல காட்டிக்கொள்கிறார். இது அங்குள்ளவர்களுக்கே தெரியும். 2026 தேர்தலுக்கு முன்னதாக பாமகவின் மூத்த நிர்வாகிகள் எப்படி இருவரையும் இணைத்து மீண்டும் டிராக்குக்கு கொண்டுவருகிறார்கள் என்பதுதான் முக்கியம். இல்லாவிட்டால் கட்சி பாழ்படுவதை தடுக்க முடியாது. இந்த பிளவை பாஜக சரிசெய்யுமா என்பதை விட, இந்த பிரச்சினையில் அவர்கள் கை உள்ளது. அவர்களுக்குதேவை அவர்களது ஆள். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.