- ராஜா வாசுதேவன்
என்னதான் செயற்கரிய செயல்களை செய்தவர்களும் அவர்களின் சுயநலங்கள் அதிகரிக்கும்போது, மக்களால் வெறுக்கப்படுகிறார்கள் என்பது இலங்கையை தொடர்ந்து வங்கதேசத்திலும் நிரூபணம் ஆகியுள்ளது.
தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டவர் ஷேக் ஹசீனா. நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர். பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை 1971- ல் மீட்டு தனிநாடக்கிய முஜிபூர் ரகுமானின் மகள் இவர். முஜிபூர், பின்னர் ராணுவத்தால் கொல்லப்பட்டப் பிறகு அவருடைய அவாமி லீக் கட்சிக்கு தலைமை ஏற்று ஆட்சிக்கு வந்தவர் ஹசீனா.
இவருடைய ஆட்சிக் காலத்தில் வங்கதேசம் பொருளாதரத்தில் மேம்பட்டது.
நாட்டின் தனிநபர் வருமானம் நான்கு மடங்காக உயர்ந்தது. வறுமையிலிருந்து இரண்டரை கோடி மக்கள் மீட்கப்பட்டனர். உலக அளவில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் வங்க தேசம் முன்னணி நாடாக மாறியது. இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தானை விட வங்க தேசத்தின் பொருளாதரம் மேம்பட்டது.
அனைத்தும் ஷேக் ஹசினாவின் நிர்வாகத் திறமையால் நிகழ்ந்தது என்று ஊடகங்கள் புகழ்ந்தன. அதனால் தான் அவரால் தொடர்ச்சியாக நான்காவது முறை ஜனவரியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரமுடிந்தது. இவ்வளவு பெருமைக்குறிய ஹசீனா, சுய நலங்கள், மக்கள் விரோத செயல்கள், ஊழல் புகார்கள், அரசியல் கொலைகள் போன்றவற்றின் காரணமாக இப்போது அந்த நாட்டில் மிகவும் வெறுக்கப்படும் மனிதராகிவிட்டார்.
வங்கேதேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 விழுக்காடு கொடுக்கப்படும் என்று ஷேக் ஹசீனா அரசு வெளியிட்ட அறிவிப்பு அவருடைய கட்சிக்காரர்களுக்கு அதிக அளவில் பயன் தரக்கூடியது என்ற கருத்தால் எதிர்ப்பு வலுவானது. கடந்த ஒரு மாதமாக நடந்த போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்துவிட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்து நடைபெறவில்லை. நாட்டின் முதுகெலுமபாக விளங்கும் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை. நிலைமையை சமாளிக்க பிரதமர் பேச்சு வார்த்தைக்கு பல முறை அழைப்பு விடுத்தும் மாணவர் தலைவர்கள் அதனை ஏற்கவில்லை.
கடைசியாக போராட்டக்காரர்கள் கையில் கட்டைகளுடன் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டுக்குள் ஆகஸ்டு 5- ஆம் தேதி நுழைந்தவுடன் நிலைமை மோசமானது. அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்த ராணுவம் ஹசீனாலை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டது.
இதே தான் கடந்த 2022- ல் இலங்கையில் நடைபெற்றது. விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டவர்கள் என்ற பெருமையுடன் ஆட்சி செய்ததது ராஜபக்சே குடும்பம். விலை வாசி உயர்வு, ஊழல் புகார்கள், வன்முறை, வேலையின்மை, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பொது மக்கள் வெகுண்டு எழுந்ததால் கொழும்பு நகரம் போர்க்களம் ஆனாது. உச்சக்கட்டமாக பிரதமர் ராஜபக்சேவின் வீட்டுக்குள் புகுந்து சூறையாடினார்கள். அவர் வீட்டை விட்டு வெளியேறி ராணுவத்தின் உதவியுடன் தலைமறைவாக இருந்து பின்னர் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல வேண்டியிருந்தது.
அகங்காரத்தால் ஆட்சியாளர்கள் அழிந்துப் போகிறார்கள் என்பதற்கு ராஜபக்சேவை தொடர்ந்து ஷேக் ஹசீனா ஒரு எடுத்துக் காட்டு என்றால் மிகையல்ல.