மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்
ஆவடி மாநகராட்சியால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் களத்தில் இறங்கி மூடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஆவடி மாநகராட்சி பட்டாபிராம் பகுதியில், 20 மற்றும் 37 ஆவது வார்டை இணைக்கும் கோபாலபுரம் கிழக்கு பகுதியில் முதல் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி சுற்றுவட்டாரத்தில் 5000 திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த 2022 ல், இப்பகுதியில் தார் சாலை போடப்பட்டது. அதன் பின், கடந்த ஓராண்டுக்கு முன், ‘மெட்ரோ’ குடிநீர் பணிக்கு சாலை தோண்டப்பட்டது.
அப்பொழுது வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு வழங்க, சாலை நடுவில் பள்ளம் தோண்டி குழாய் புதைக்கப்பட்டது. இந்நிலையில், சாலை குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம், நாளுக்கு நாள் மோசமாகியது. நீண்ட நாள் ஆகியும் சீர் செய்யாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள், பள்ளி சிறுவர்கள் விபத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட கவுன்சிலரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கோபாலபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் தலைமையிலான ஆட்டோ ஓட்டுனர்கள், நேற்று இரவு, தங்கள் சந்தா பணம் 20,000 ரூபாய் செலவழித்து, சாலையை சீரமைத்தனர். தொடர்ந்து இன்று காலை, சாலையில் தண்ணீர் ஊற்றி ‘கியூரிங்’ செய்தனர்.
அவர்களின் செயலை பாராட்டிய பகுதி வாசிகள், மாநகராட்சியின் மெத்தன போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.