

ஆவடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆவடி மாநகராட்சி அருகே எம்ஜிஆர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான, முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில்,கழக அமைப்பு செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், கழக சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.அப்துல் ரஹீம் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர்திரளாக கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழகத்தை ஆண்டு வரும் விடியா திமுக அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியதோடு, நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயிலை நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கழக பொதுச்செயலாளரும்,முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்ஸாண்டர் பேசுகையில்,மின்கட்டணம் உயர்வினால் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் விலை ஏற்றமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், விக்கிரவாண்டி இடை தேர்தலில் வெற்றிபெற்றதற்கும் மக்களுக்கு கிடைத்த பரிசாக இந்த மின் கட்டண உயர்வு அமைந்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. முதலில் இங்குள்ள முதலமைச்சர் ஸ்டாலினை மாற்ற வேண்டும். தமிழகத்தில் சுமார் 5க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள் ஆண்டு வருகிறார்கள். ஸ்டாலின் ஒரு முதலமைச்சர் அவரது மனைவி ஒரு முதலமைச்சர், தங்கை கனிமொழி ஒரு முதலமைச்சர், மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு முதலமைச்சர், மருமகன் சபரீசன் ஒரு முதலமைச்சர் என பல முதலமைச்சர்கள் உள்ளனர்.தமிழ்நாடு நிலைமை மோசமாகியுள்ளது விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது, பெண்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது, கற்பிற்கு ஆபத்து உள்ளது, சட்டம் ஒழுங்கு சரி இல்லை. இதுபோன்ற அவலமான ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் எனவும் அவர் பேசினார்.


