தமிழகத்தில் விசாரணைக் கைதிகள் காவல் நிலையங்களில் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து முதலமைச்சர் விஜய் எப்போது மௌனம் கலைப்பார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்:
நாகர்கோவில் சிறைக்குள் சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், தூத்துக்குடியில் அருணாச்சலம் எனும் விசாரணைச் சிறைவாசி காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“Sorry சொல்லக் கூட துணிவில்லையா?” – மு.க.ஸ்டாலின் கண்டனம்:
இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“எதிர்க்கட்சியாக இருக்கும் போது, ‘Sorry சொன்னால் போதுமா?’ என என்னைப் பார்த்து வீராவேசமாகக் கேட்டவர், முதல்வரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? Accountability (பொறுப்புக்கூறல்), Apology (மன்னிப்பு) ஆகியவை முதல்வருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மூன்று மாதத்தில் 4 காவல் மரணங்கள்!” – சீமான் சாடல்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்:
“சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் அருணாச்சலம் எனும் விசாரணைச் சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.
மூன்று மாதத்தைக் கூட நிறைவு செய்யாத த.வெ.க ஆட்சியில் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக இருந்தாலும் அரிதான வழக்குகளுக்கே மரண தண்டனை வழங்கப்படுகிறது. எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலமே பெற்றுத் தர வேண்டும். காவல்துறையின் எதேச்சதிகாரப் போக்கை ஒருநாளும் ஏற்க முடியாது.
அருணாச்சலம் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க மு.வீரபாண்டியன் கோரிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு.வீரபாண்டியன் தெரிவிக்கையில்:
“கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்வலைகள் அடங்காத நிலையில், தூத்துக்குடி அருணாச்சலத்தின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப்போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. காவல் மரணங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
