நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 2023 டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். அதே சமயம் தன்னலம் கருதாத பொது நலவாதியாக வாழ்ந்து மறைந்த மாமனிதரான விஜயகாந்தின் உடல், அவர் மிகவும் நேசித்த தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நாள்தோறும் பொதுமக்கள் பலரும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால் திரை பிரபலங்கள் பலரும் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று தங்களின் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சிம்பு விஜய்காந்தின் இல்லத்திற்கு சென்று கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர்களை தூவி இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் மனைவி மற்றும் மகன்களுக்கும் தனது ஆறுதல்களையும் தெரிவித்தார். அப்போது கேப்டனின் இரு மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேப்டனின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அடுத்ததாக விஜய பிரபாகரனும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ், விஷால் போன்றவர்கள் விஜயகாந்தின் மகன்கள் திரைத்துறையில் உயர்ந்த நிலையை அடைய நிச்சயம் தோள் கொடுப்போம், எந்த உதவியானாலும் எங்களிடம் கேளுங்கள் என ஏற்கனவே கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடிகர் சிம்புவும் விஜயகாந்தின் மகன்களுக்கு சினிமா துறையில் எந்த வகையிலாவது உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.