ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராக உள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 33 ஆண்டுகள் குறித்து அமிதாப்பச்சனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ரஜினி டிவிட்டரில் பதிவிட்டார். மேலும், மனம் முழுக்க ஆனந்தத்தில் நிரம்பி வழிவதாகவும் ரஜினி குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அமிதாப் பச்சன், தலைவர் என்றால் அது நீங்கள் மட்டும்தான். உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்டுள்ளார்.