நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு தனது 43வது திரைப்படமான புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். பின்னர் பட குழுவினர் இந்த படத்திற்காக நிறைய நாட்கள் தேவைப்படுவதாக படத்தை தள்ளி வைத்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிப்பதற்கு கமிட் ஆகிவிட்டார். சூர்யாவின் 44ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு சூர்யா 44 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடித்து ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் தொடங்க இருக்கிறதாம்.
மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க போவதாகவும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்றும் உறியடி விஜய்குமார் இதில் வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகிறது. அதே சமயம் ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சமீபகாலமாக தகவல் வெளியாகி வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் மேலும் ஒரு மலையாள பிரபலம் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் ஜெயராம் என்று பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் ஜெயராம் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கடைசியாக ஆபிரகாம் ஓஸ்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.