நடிகர் அதர்வா தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகரான முரளியின் மூத்த மகன் அதர்வா தமிழ் சினிமாவில் ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘பரதேசி’, ‘இரும்பு குதிரை’, ‘சண்டிவீரன்’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். கடைசியாக இவரது நடிப்பில் ‘டிஎன்ஏ’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாளை (செப்டம்பர் 12) இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தணல்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ரவீந்திர மாதவா எழுதி, இயக்க அன்னை பிலிம் புரொடக்சன் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. ‘100’, ‘ட்ரிக்கர்’ ஆகிய படங்களுக்கு பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அதர்வா. இதில் லாவண்யா திரிபாதி, அஸ்வின் காக்குமானு, அழகம்பெருமாள் ஆகியோர் அதர்வாவுடன் இணைந்து நடித்திருக்கின்றனர். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி சமீபத்தில் சென்னையில் நடந்த ‘தணல்’ பட விழாவில் கலந்து கொண்ட அதர்வாவிடம், “முரட்டுக்காளையாக சுற்றிய விஷாலுக்கு திருமணம் நடக்கப்போகிறது. உங்களுக்கு திருமணம் எப்போது?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதர்வா, “விஷால் எப்போது திருமணம் செய்து கொள்கிறாரோ அதற்குப் பிறகு நானும் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.