Homeசெய்திகள்சினிமாதன் படங்களையே அவர்களின் முகவரியாய் மாற்றியவர்....இயக்குனர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயண விழா!

தன் படங்களையே அவர்களின் முகவரியாய் மாற்றியவர்….இயக்குனர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயண விழா!

-

- Advertisement -

இயக்குனர் பாலா தனது தனித்துவமான அழுத்தமான படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தன் படங்களையே அவர்களின் முகவரியாய் மாற்றியவர்....இயக்குனர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயண விழா!இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்தது. அதே சமயம் திரைத்துறையில் இயக்குனர் பாலா தனது 25 ஆம் ஆண்டினை நாளையுடன் (டிசம்பர் 10) நிறைவு செய்கிறார். இதனை கொண்டாடும் விதமாக வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே நாளில் பாலாவின் 25 ஆண்டு கலைப்பயண விழாவையும் கொண்டாட வணங்கான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “சினிமா ஒரு பேரன்பு கொண்ட பெரும் ஆலமரம். அந்த ஆலமரத்தின் விழுதுகளில் ஒரு விழுது தான் இயக்குனர் பாலா. வளமான அந்த விழுது, மரத்தை உறுதியாக தாங்கி இருப்பது தனது பங்களிப்பின் மூலம் தான். அப்படியான பங்களிப்பின் மூலம் நிறைய நாயகர்களை கலைஞர்களை தனது 25 ஆண்டு காலத்தில் உருவாக்கியிருக்கிறார் பாலா. அதுவரை திறமை இருந்து முகவரி கிடைக்காமல் தவித்தவர்களை தேடி தன் படங்களையே அவர்களது முகவரியாக ஆக்கியவர் பாலா. அவர் தன் கலை உளியால் துளித்துளியாக செதுக்கிய சிற்பங்கள் தான் தமிழ் திரையுலகம் என்ற ராஜகோபுரத்தில் மின்னிக் கொண்டிருக்கிறது. பாலா என்ற தனிமனிதர் ரத்தமும் சதையுமாக உருவாக்கிய சிறிய பட பட்டியலில் அவர் சாதித்திருப்பது நீண்ட வரிசை. அதன்படி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றவர்களில் பாலாவும் ஒருவர். எனவே நாம் வாழும் காலத்தில் கலை ஆன்மா கொண்ட ஒரு மகத்தான மனிதனை கொண்டாடவும் பெருமை கொள்ள செய்யவும் ஓடும் ஓட்டத்தில் நமக்கு நேரம் வாய்க்காமல் போயிருக்கிறது. ஆனால் இன்னமும் அதை காலம் தாழ்த்திக் கொண்டே போகக்கூடாது என்று பாலாவின் 25 ஆம் ஆண்டினை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறோம். வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த இருக்கிறோம்.

இது பாலா என்கிற ஒரு தனிப்பட்ட இயக்குனருக்கான விழா மட்டுமல்ல. கால் நூற்றாண்டாக தமிழ் திரையை கலையம்சம் பொருந்திய தனது திரைக்காவியங்களால் நிறைந்த ஒரு மாமனிதனுக்கு நாம் செய்கிற மரியாதை. இயக்குனர் பாலா இன்னும் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகில் ஆரோக்கிய நடை போட தமிழ் திரை உலகின் அனைத்து நண்பர்களும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ