அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் அரசன். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படம் தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தொடங்கும் எனவும் செய்திகள் கசிந்துள்ளது. இப்படமானது ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாக இருப்பதாலும், முதன்முறையாக சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி சென்னையின் புறநகர் பகுதியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் சிம்பு, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது அதிரடி காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர் என்றும் இவர்களது காட்சிகள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்படும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் ஆண்ட்ரியா மற்றும் நெல்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் எனவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
- Advertisement -


