டப்பிங் யூனியன் வாசலில் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சங்கீதா ஆவேசமாக பேட்டி அளித்தார்.
டப்பிங் யூனியனில் இருக்கும் சங்கீதா என்ற பெண்ணை ஷாஜி என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இன்று (அக்டோபர் 15) சென்னை கே.கே. நகரில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தலைவர் ராதாரவியும், பொதுச் செயலாளர் கதிரவனும் செய்தியாளர்களிடம் சங்கீதா சொன்னது பொய் என்று பேசினர். அந்த சமயத்தில் டப்பிங் யூனியன் வாசலில் சங்கீதாவும் பேட்டி கொடுத்துள்ளார்.


அப்போது அவர், “ராதாரவி மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நான் அங்கு சென்றதால் இந்தப் பிரஸ் மீட்டுக்கு வரமுடியவில்லை. இங்கு அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் இன்னும் ரிப்போர்ட் தாக்கல் செய்யவில்லை. நான் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளேன். இன்று அவர்கள் பேசியதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. எங்கே எப்போது வர வேண்டும் என்று சொல்லுங்கள் கொடுக்கிறேன். நான் சொன்ன புகார் அனைத்தும் பொய் என்றால் அவர்கள் சொன்னதும் பொய்தான்.
போலீஸ் சொல்வதை கோர்ட் கேட்க வேண்டுமா? இல்லை கோர்ட் சொல்வதை போலீஸ் கேட்க வேண்டுமா? அப்படி கேட்கவில்லை என்றால் யூனிபார்ம் கழண்டுவிடாதா? மதிக்க வேண்டும் அல்லவா. உத்தரவை மதிக்கவில்லை என்றால் நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவேன்.
போலீஸிடம் அவர்கள் உண்மையான வீடியோ கொடுக்கவில்லை. என்னிடம் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த கூட நான் தயார். விசாரணை குறித்து எனக்கு முறையான அறிவிப்பு தரவில்லை. எனது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் தானே நடக்கிறது. கள்ளக்கடத்தல் இல்லையே. எதற்காக உள்ளே போன் அனுமதிக்கவில்லை. நான் பென் கேமிரா வைத்திருக்கவில்லை. அப்படி இருந்தால் அவர்களை நிரூபிக்க சொல்லுங்கள்.அப்படியே வைத்திருந்தாலும் வீடியோ எடுப்பதில் என்ன தவறு. என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்” என்றார்.


