மணிரத்னம் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அமரர்கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்திருந்தார் மணிரத்தினம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி இருந்த இப்படத்தின் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவில் வசூலை தரவில்லை. அதேசமயம் பொன்னியின் செல்வன் நாவலில் இருக்கும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா பொன்னியின் செல்வன் படம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அதன்படி சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, “கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்திருப்பேன் எனக்கு தெரியவில்லை. அந்த அளவில் கணக்கு வழக்கே இல்லாமல் படித்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களும் என்னை கற்பனை உலகத்தில் மிதக்க வைத்தது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும் போது பொன்னியின் செல்வன் மாதிரியே இல்லை” என்று மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்து பேசியுள்ளார். மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் பல படங்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக தளபதி திரைப்படத்தில் தான் இவர்கள் இணைந்திருந்தனர். அதன் பிறகு எந்த படத்திலும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.