மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இளையமகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தன் தந்தையை போலவே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டனர். மூத்த மகன் அன்பு கோரிப்பாளையம் பட இயக்குநர் ராசு மதுரன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பார்த்தோம் பழகினோம் என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் இதுவரைவெளியாக வில்லை. இதேபோல, இவர் நடித்த அந்த 60 நாட்கள் என்ற படமும் வெளியாகாமல் போனது. இதுமட்டுமல்லாது, ‘பொம்மலாட்டம் நடக்குது’, ‘திரிபுரம்’ ஆகிய படங்களும் பாதியிலேயே நின்றன.
இருப்பினும், கடந்த 2020-ம் ஆண்டு அல்டி என்ற படமும், அதையடுத்து சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படமும் அன்பு நடிப்பில் வெளியானது. மயில்சாமியின் இளையமகன் யுவனும் தணியும், தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தங்கமகன் என்ற புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் கதாநாயகி அஸ்வினி ஜோடியாக நடிக்க உள்ளார். பெரியதிரை கைவிட்டாலும் சின்னத்திரையில் நடிக்க உள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.