பராசக்தி படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சுதா கொங்கரா. இவர் அடுத்ததாக பராசக்தி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வருகிறது. இதில் ரவி மோகன் வில்லனாக நடிக்க ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதனை படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்தி திணைப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
சமீபத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக தகவல் கசிந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, அதர்வா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தவிர இந்த மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.