சின்னத்திரை மேடை நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் KPY பாலா. தான் சம்பாதித்த பணத்தில் அவ்வப்போது பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். அந்நிலையில் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களையும் ஒரு வீட்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியது என தொடர்ந்து உதவிகளை செய்து வந்தார். இதற்காக அவர் எந்த ஒரு நிதியையும் திரட்டவில்லை. தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து தான் இந்த உதவியை செய்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் பகுதிக்கு அருகில் உள்ள கோட்டகயப்பாக்கம் எனும் கிராமத்தில் குடிநீரில் சுண்ணாம்பு படிவுகள் கலந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நீரை குடிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல்வேறு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகினர். பலருக்கு சிறுநீரகப் பிரச்சினைகள் உருவாகி உள்ளது. எனவே கிராம மக்கள் நடிகர் பாலாவிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட பாலா அடுத்த 10 நாட்களுக்குள் அதனை சரி செய்ய முன்வந்துள்ளார். கிராமத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்காக 3 லட்சம் மதிப்பிலான சுத்திகரிப்புக் கருவிகளைக் கொடையாக அளித்துள்ளார். இதனால் அம்மக்கள் பெரிதளவு பயனடைந்துள்ளனர். மேலும் நடிகர் பாலாவுக்கு தங்கள் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -
