கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பி எஸ் மித்ரன், கார்த்தி நடிப்பில் சர்தார் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் பி எஸ் மித்ரன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தற்போது, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்த படம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடிகர் சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பி எஸ் மித்ரன், கே ஜி எஃப் பட நடிகர் யாஷிடமும் கதை ஒன்றை கூறி கால் சீட் பெற்றிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. அதாவது நடிகர் யாஷ் தற்போது கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு பி.எஸ் மித்ரன், யாஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்குவார்.
இந்த படத்தை முடித்துவிட்டு தான் சிரஞ்சீவியை, பி எஸ் மித்ரன் இயக்கப் போகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சிரஞ்சீவி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.