புஷ்பா 2 படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்… படக்குழுவினர் குழப்பம்…
- Advertisement -
புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து பிரபலம் விலகியதால், படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பும் இன்று வரை முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இருப்பினும், படத்திற்கான புரமோசன் பணிகளும் அவ்வப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஓடிடி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் என பட வெளியீட்டுக்கு முன்பு புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு லாபம் வந்துவிட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஊம் சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி உள்பட அனைத்து பாடல்களுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்குமே புஷ்பா படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், படத்தொகுப்பாளர் ஆண்டனி ரூபன் இத்திரைப்படத்திலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் முன்னணி எடிட்டராக வலம் வருபவர் ஆண்டனி. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களின் பணிகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதால், புஷ்பா 2 படத்திலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். இவர் தமிழில், தெறி, வேதாளம், ரெமோ, அண்ணாத்த, ஜவான் ஆகிய படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.