விஷ்ணு விஷால் பட இயக்குனர் அஜித்திடம் கதை சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித், யாருடைய துணையும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து தனது கடின உழைப்பால் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருடைய நடிப்பு பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த அளவிற்கு காதல், எமோஷனல், ஆக்சன் என அனைத்திலும் பட்டைய கிளப்பி விடுவார். அதிலும் இரட்டை வேடங்களானாலும் சரி, மூன்று வேடங்களானாலும் சரி ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு விதமான பரிமாணத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். சினிமா ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தனது கனவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் அஜித். அந்த வகையில் சிறுவயதில் இருந்தே தனக்கு விருப்பமான கார் பந்தயங்களில் பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
இந்நிலையில் தான் அடுத்ததாக நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கப் போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த வார இறுதிக்குள் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அஜித்தின் 65ஆவது படத்தை யார் இயக்குவார்? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நடிகர் தனுஷ், அஜித்தை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. பின்னர் பிரசாந்த் நீல், சிறுத்தை சிவா, ஹனீஃப் அடேனி போன்ற இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டது. தற்போது அந்தப் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயரும் இணைந்துள்ளது.
அதாவது விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் சமீபத்தில் அஜித்திடம் கதை சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும் ஏகே 64 படத்திற்கு பிறகு மனு ஆனந்த் இயக்கத்தில் அஜித் தனது 65ஆவது படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் இந்த தகவல் உறுதி செய்யப்படும்.

இயக்குனர் மனு ஆனந்த் , ‘எஃப்.ஐ.ஆர்’ படத்திற்கு பிறகு ஆர்யா, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


