ஏடிஎம் கலெக்சன் வாகன ஓட்டுனர் ரூ. 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம்
ஏடிஎம்களின் பணம் வைப்பு வைக்கும் தனியார் நிறுவன ஓட்டுநர் கலெக்சன் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரட்டி சென்று மடக்கி பிடித்த ஊழியர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களில் இருந்து பணத்தை வசூல் செய்வது மற்றும் ஏடிஎம் எந்திரங்களில் பணத்தை டெபாசிட் செய்வது போன்று பணியாற்றி வரும் தனியார் நிறுவனம் ஒன்று அண்ணா நகரில் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கலெக்சன் வாகனம் ஒன்று ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசூல் செய்த சுமார் 35 புள்ளி 5 லட்சம் பணத்தை அடுத்தடுத்து நிறுவனங்களில் சேகரித்து வந்தனர். ஊழியர்கள் பணத்தை வாங்கி உள்ளே பத்திரமாக வைத்து பூட்டிய பிறகு மீண்டும் அவர்கள் வாகனத்தில் ஏறுவதற்குள் திடீரென அந்த வாகன ஓட்டுனர் அமீர் பாஷா உடன் வந்த ஊழியர்களை விட்டுவிட்டு வாகனத்தை எடுத்துக் கொண்டு திடீரென தாமாக ஓட்டி சென்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத அவருடன் வந்த உதவி மேலாளர் பாரதி என்பவர் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் தகவலை ட்ராக் செய்து தனது நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரிடம் தெரிவிக்கையில் அப்போது வாகனம் சென்னை மாதவரம் நோக்கி சென்றதை தெரியப்படுத்தினார்.
தொடர்ந்து அவினாஷ் என்ற அந்த ஊழியர் வாகனத்தை விரட்டி சென்று மாதவரம் மண்டலம் அலுவலக அருகே மடக்கி பிடித்தார். இதற்கிடையில் வாகனத்தில் இருந்த பணத்தை திருவான்மியூரில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் பத்திரமாக டெபாசிட் செய்து விட்டு அமீர் பாஷா மற்றும் வாகனத்தையும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். இந்த விவகாரம் குறித்து உதவி மேலாளர் பாரதி அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் அமீர் பாஷா மீது வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.