தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி. விஜய் மோகன் மீது, திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக இராணிப்பேட்டை மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பவ்யலட்சுமி என்ற பெண் பரபரப்பான புகார் மனுவை அளித்துள்ளார்.


தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் அளித்துள்ள அந்த விரிவான புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய தொடர்பு
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மூலமாக தமக்கு ஜி. விஜய் மோகனுடன் அறிமுகம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது நெருங்கிய காதலாக மாறியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார். தம்மை திருமணம் செய்து கொள்வதாக விஜய் மோகன் அளித்த உறுதியான வாக்குறுதியை நம்பி, தனது எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை அவரைச் சார்ந்தே எடுத்ததாகக் கூறியுள்ளார்.
மின்னணு ஆதாரங்கள் சமர்ப்பிப்பு
இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள், இன்ஸ்டாகிராம் சாட்டிங் திரைப்பிடிப்புகள் (Screenshots), ஆடியோ மற்றும் வீடியோ கால் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் ஆதாரங்களை மனுவுடன் அவர் இணைத்துள்ளார்.

நீண்ட காலமாக நம்பிக்கையளித்துப் பழகிய பின்னர், தமக்கு கொடுத்த திருமண வாக்குறுதியை நிறைவேற்றாமல் விஜய் மோகன் படிப்படியாக தொடர்பைத் துண்டித்துக் கொண்டதாகவும், இதனால் தாம் கடுமையான மன உளைச்சலுக்கும் தனிப்பட்ட முறையில் அவமானத்திற்கும் ஆளானதாகவும் அப்பெண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தாம் சமர்ப்பித்துள்ள மின்னணு ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமக்கு உரிய நீதி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றும் புகார்தாரர் அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“சினிமா பார்த்து கண்ணீர் வடிச்சா மட்டும் போதாது!” – அருணாச்சலம் லாக்-அப் மரணத்தில் சீறிய உதயநிதி!
