நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 16 வயது மாணவி தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த ஜார்கண்டை சேர்ந்த 16 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை பூர்வீகமாகக் கொண்ட அந்த இளம்பெண், கடந்த மே மாதம்நீட் தேர்வு பயிற்சிக்காக கோட்டாவுக்கு வந்து விக்யான் நகர் பகுதியில் பெண்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று இரவு திடீரென அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விடுதி காப்பாளர் காவல்துறையிடம் அளித்த தகவலின்பேரில் அங்குவந்த போலீசார், விடுதியின் வார்டன் மற்றும் பிற பெண்களின் உதவியுடன் கதவை திறந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது மரணம் குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

நடப்பாண்டில் மட்டும் அங்கு தற்கொலை செய்த மாணவர்களின் எண்ணிக்கை 25ஐ நெருங்கியுள்ளது. போலீசாரின் பதிவுகளின்படி, 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, கடந்த மாதத்தில் ஏழு பேர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர்.