டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதை அடுத்து, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. எனினும் காற்று மாசின் அளவு குறையவில்லை. இந்த நிலையில் டெல்லியில் இன்று இரவு காற்று மாசு 500 புள்ளிகளை நெருங்கியுள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி டெல்லி பாவனாவில் 494 புள்ளிகள் பதிவாகியது. அசோக் விகார் 492, ஐ.டி.ஓ 491 மற்றும் டெல்லி விமான நிலையத்தில் 481 புள்ளிகள் ஆக பதிவாகியுள்ளது.
காற்று மாசு அதிகரித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் ஏற்கனவே 6ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிட்ட நிலையில், தற்போது 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், காற்று மாசு தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றவும், மீதமுள்ள பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி வழங்கி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.