புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண விருது (President’s Colours) வழங்கும் விழாவில், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீண்டநேர அணிவகுப்பு – வெயிலின் தாக்குதல்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, புதுச்சேரி காவல்துறைத் தலைவர் (DGP) ஷாலினி சிங்கிடம் ஜனாதிபதியின் வண்ண விருதை வழங்கினார். இந்த விழாவிற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செய்வதற்காகக் காலை 6:00 மணிக்கே மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

விழா முடியும் வரை, அதாவது காலை 10:00 மணி வரை தொடர்ச்சியாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர். கடுமையான வெயிலின் தாக்கத்தையும், நீண்ட நேர அணிவகுப்பையும் தாங்க முடியாத நிலையில், விழா மேடையில் அமித்ஷா உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, வரிசையில் நின்றிருந்த 15-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் திடீரென மயங்கி சரிந்தனர்.
விழாவில் நீடித்த பரபரப்பு
ஒரே நேரத்தில் பல காவலர்கள் மயங்கி விழுந்ததால் விழாக் கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றமும் சலசலப்பும் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பிற காவலர்கள், மயக்கமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காகப் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்: உத்தர பிரதேசத்தில் அதிரடி போலீஸ் நடவடிக்கை!
