வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Plates) நெதர்லாந்து நாட்டால் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய கலாச்சார பொக்கிஷம் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆனைமங்கலம் செப்பேடுகள் தாயகம் திரும்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற உள்ளது. நெதர்லாந்து அரசின் மூலம் இவை இந்தியாவிற்கு முறைப்படி ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், இது குறித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

அரசு முறைப் பயணமாக நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இடம், அந்நாட்டு அரசு இந்த அரிய வரலாற்று பொக்கிஷத்தை ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செப்பேடுகள் தமிழர்களின் சங்ககாலம் மற்றும் சோழர் வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக கருதப்படுகின்றன.
இந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் சுமார் 30 கிலோ எடையுடன், 21 தகடுகளாக அமைந்துள்ளன. இவை சோழ பேரரசர் ராஜராஜ சோழன் காலமான கி.பி. 985–1014 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுதப்பட்டுள்ள இந்த செப்பேடுகளில் அரசாட்சி, வழிபாட்டு மரபுகள், நிர்வாக முறை மற்றும் சோழர்களின் வம்ச வரலாறு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜய மன்னரால் நிறுவப்பட்ட பௌத்த மடம் தொடர்பான தகவல்களும், அதற்கு ஆனைமங்கலம் பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து ராஜராஜன் சோழன் வழங்கிய வருவாய் மானிய விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர்கள் தென்னிந்தியா, இலங்கை மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் கடல் வழி ஆதிக்கம் செலுத்திய வரலாறும் இந்த செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செப்பேடுகள் தஞ்சாவூரில் கட்டப்பட்ட பெரிய கோயில் உள்ளிட்ட கட்டிடக் கலைச் சிறப்புகள், நிர்வாக முறை மற்றும் தமிழர் பண்பாட்டு வளர்ச்சி குறித்த தகவல்களையும் கொண்டுள்ளன. மேலும், ராஜராஜ சோழன் வழங்கிய ஆணைகள் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை, பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழனால் மேம்படுத்தப்பட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
வரலாற்று ஆதாரங்களின்படி, 1700-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நாகப்பட்டினம் பகுதி டச்சு கிழக்கிந்திய கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், டச்சு மதபோதகர் ஃபுளோரென்ஷியஸ் கேம்பர் இந்த செப்பேடுகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இவை நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. தற்போது அவை அங்கு ஆய்வுப் பொருளாக வைக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பார்வைக்கு அரிதாகவே கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக நடைபெற்ற கோரிக்கைகள் மற்றும் தூதரக பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்த செப்பேடுகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்று சின்னம் மீண்டும் தாயகம் திரும்பும் முக்கியமான தருணமாக இது அமைந்துள்ளது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கும், உலகளாவிய வரலாற்று ஆய்வுகளுக்கும் புதிய முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
