ஆந்திர மாநில புதிய ஆளுநராக நீதிபதி எஸ். அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் அவருக்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பதவிப் பிரமாணம் செய்துகொண்டதும் ஆளுநருக்கு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான அப்துல் நசீர் 1958ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி கர்நாடக மாநிலம் மூடபிதாரி தாலுகா பெலுவாயில் பிறந்தார். மங்களூருவில் உள்ள் மகாவீர கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், கொடியால்பைல் எஸ்டிஎம் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 12 மே 2003 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 24 செப்டம்பர் 2004 அன்று நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு. 2017 பிப்ரவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
